கன்னியாகுமரியில் அரசு ஊழியரை கையும் களவுமாக கைது செய்த போலீஸ்.. திடீரென கவுன்சிலர்கள் தந்த ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்தவரிடம், ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குற்றிக்காட்டு விளை பாகோடு பகுதியை சேர்ந்த 39 வயதாகும் ஜான்சன் மகன் ஜெபின் என்பவர் அதே பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்திருக்கிறார். கடந்த 19-ந் தேதி அன்று பாகோடு பேரூராட்சி அலுவலகத்திற்கு ஜெபின் சென்றிருக்கிறார். அப்போது பணியில் இருந்த இளநிலை உதவியாளர் விஜி (42) என்பவரிடம் முறையிட்டுள்ளார். அப்போது ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் உங்களுடைய கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும் என்றாராம்.

உடனே ஜெபின் நாளை வந்து பணம் கொடுப்பதாக கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெபினிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். அவர், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சென்று கொடுக்க சென்றுள்ளார். பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைபடி ஜெபின் நேற்று பாகோடு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று ரூ.2 ஆயிரத்தை இளநிலை உதவியாளர் விஜியிடம் கொடுத்தாராம்.
உடனே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி சால்வன்துரை தலைமையில் அதிரடியாக அலுவலகத்திற்குள் புகுந்து இளநிலை உதவியாளர் விஜியை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தார்கள். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் மற்றும் பாகோடு பேரூராட்சி துணைத் தலைவி ஜெனிமோல் தலைமையில் கவுன்சிலர்கள் செல்வி, சுகுமாரன், பால்ராஜ், ராஜேந்திர பிரசாத், துளசி, டென்னிஸ், சுஜிதா பெனட், ரெங்கபாய் உள்பட கவுன்சிலர்கள் பாகோடு பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டார்கள்.
இளநிலை உதவியாளர் யாரிடமும் லஞ்சம் பெறாதவர், அவர் நேர்மையான அதிகாரி என்றும் சிக்க வைக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இப்படி செய்திருப்பதாக குற்றம்சாட்டினார்கள். மேலும் அலுவலகத்தின் உட்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும், மேஜை டிராயரில் பணத்தை போட்டு அவரை சிக்க வைக்க முயற்சித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications