நான் உங்கள் வீட்டு பிள்ளை.. கன்னியாகுமரியில் உருகிய உதயநிதி ஸ்டாலின்! மீனவர் நாள் விழாவில் உற்சாகம்!
கன்னியாகுமரி : ஒன்றிய அரசு மீனவர்களுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து திராவிட மாடல் கழக அரசு உங்களோடு நிற்கும் என கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற உலக மீனவர் நாள் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளனர்.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து நடத்தும் உலக மீனவர் நாள் வெள்ளி விழா கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார், மேலும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும் போது," நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கழக நிகழ்ச்சிக்காக வர இருந்ததை தெரிந்து கொண்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் என்னை இங்கு வர வைத்துள்ளனர். முட்டம் கடற்கரை பகுதிக்கு ஏற்கனவே வந்துள்ளேன், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். இயற்கையோடு வாழும் கடலோடிகளோடு மீனவர் தினத்தில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

உங்கள் வீட்டு பிள்ளை
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மீனவர்கள் அதிகமாக இருக்கும் தொகுதி, இதனால் தான் நான் உங்கள் வீட்டு பிள்ளை என கூறுகிறேன். நாட்டு படகுகளை எந்திர படகுகளாக்கும் திட்டத்தில் 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கடல் ஆம்புலன்ஸ்
மீன்பிடி தடைக்கால நிவாரணம் கணவனை இழந்த மனைவிகளுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளதை விரைவில் நிறைவேற்றப்படும். கடல் ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. அவை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். ஒன்றிய அரசு மீனவர்களுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து திராவிட மாடல் கழக அரசு உங்களோடு நிற்கும்" என பேசினார்.

தள்ளுமுள்ளு
முன்னதாக கன்னியாகுமரி வந்தடைந்த அவருக்கு காவல்கிணறு ஜங்ஷனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்து அங்கு ஓய்வெடுப்பதற்காக தனது அறைக்கு சென்றார். அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒரு சில தொண்டர்கள் உள்ளே விடாமல் கதவை பூட்டினர். இதனால் திமுக இளைஞரணி தொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications