நாகர்கோவில் மார்த்தாண்டத்தில் நண்பனுடன் போன இளைஞர்.. கன்னியாகுமரியில் பாதி வழியில் எமனாகிய பைக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் டிப்சியோ மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். டிப்சியோ தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனமே அவருக்கு எமனாக மாறியிருக்கிறது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கடையால் எட்டு வீட்டு கொளவிளையை சேர்ந்த மரியசோபி என்பவர் குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவிங் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருந்தார்கள். இதில் 2-வது மகன் டிப்சியோவுக்கு 24 வயது ஆகிறது. இவர் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

கடந்த நவம்பர் 15ம் தேதி காலையில் வழக்கம் போல் டிப்சியோ வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்படுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை நண்பர் ஓட்டினார். டிப்சியோ பின்னால் அமர்ந்திருந்தார்.
அவர்களின் வாகனம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை சந்திப்பில் சென்றுள்ளது. அப்போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு கம்பத்தில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிப்சியோவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிப்சியோவின் நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருந்தார். இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருசக்க வாகன விபத்தில் வாகன உதிரிபாக கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications