இங்கு சரக்கு அடிக்க வேண்டாமே.. தட்டிக்கேட்ட மாஸ்டர்.. வீடு புகுந்து உயிரை பறித்த போதை இளைஞர்கள்
கரூரில் வீட்டு முன்பு மது அருந்த வேண்டாம் என்று கூறிய சமையல் மாஸ்டரை இளைஞர்கள் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
கரூர்: கரூரில் வீட்டு முன்பு சரக்கு அடிக்க வேண்டாம் என்று கூறிய சமையல் மாஸ்டரை இளைஞர்கள் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் மது அருந்த வேண்டும் என்றால் மறைந்து மறைந்து அமர்ந்து மது அருந்துவார்கள், மது அருந்துவதை மற்றவர்கள் பார்த்துவிட்டால் அவமானம் என்ற நிலையே இருந்தது. ஆனால் கடந்த 15 வருடங்களில் எல்லாம் மாறிவிட்டது. பொதுவெளியில் சர்வ சாதாரணமாக மது அருந்துகிறார்கள். மதுக்கடைகளை சுற்றி எங்கெல்லாம் காலி இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் மதுபாட்டில்களையும், தண்ணீர் கிளாஸ்களையும் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
பொது இடத்தில் மது அருந்துவதை யாராவது தட்டிக்கேட்டால் அவர்களை தாக்கிய சம்பவங்களும் அடிக்கடி நடந்துள்ளன. மது அருந்தியவர்களுடன் பிரச்சனை வேண்டாம் என்று மக்களும் சிலநேரங்களில் ஒதுங்கி போய் விடுகின்றனர்.

போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் மது அருந்துபவர்கள் அப்போதைக்கு வருவதில்லை. ஆனால் போலீசார் அங்கிருந்து சென்ற பின்னர் மது அருந்துவது தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் கரூரில் வீட்டு முன்பு மது அருந்தியதை தட்டிக்கேட்ட சமையல் மாஸ்டரை குடி போதையில் சிலர் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர், மக்கள் பாதை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சரவணன், 35, சமையல் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது தாயுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது வீட்டு முன்பு சில இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த சரவணன், அவர்களை தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், இளைஞர்கள் சரவணனின் வீட்டினுள் இருந்தே கத்தியை எடுத்து, சரவணனை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீசார், கொலை செய்யப்பட்ட சரவணனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் ரவுடியான தமிழரசன் மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்ததையடுத்து போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர், மது அருந்தியதை தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications