கரூர், நாமக்கல்லில் சரிந்த வாக்காளர் எண்ணிக்கை! SIR-க்கு பின்னரான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்(SIR) நேற்றுடன் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர்-க்கு பின் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த பணிகள் காரணமாக சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் என 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கின.

இந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கரூரில் எஸ்ஐஆர்-க்கு முன்னர் 8,98,362 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர்-க்கு பின்னர் இந்த எண்ணிக்கை 8,18,672 என 79,690 வாக்காளர்கள் குறைந்திருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, ராசிபுரத்தில் 21,003, சேர்ந்தமங்கலத்தில் 28,326, நாமக்கல்லில் 36,130, பரமத்திவேலூரில் 23,770, திருச்செங்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 31,911 வாக்காளர்கள் என மொத்தம் 1.93 லட்சம் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications