செந்தில்பாலாஜிக்கு ஏதுங்க நேரம்... வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் போதல... கொதிக்கும் உ.பி.க்கள்
கரூர்: கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான செந்தில்பாலாஜி, கட்சிப்பணிகளை கவனிப்பதை விட தன் மீதான வழக்குகளையும், புகார்களையும் எதிர்கொள்ளவே அதிகம் கவனம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அதிமுகவில் இருந்தபோது முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்தவர் செந்தில்பாலாஜி. அந்தளவிற்கு அதிமுகவில் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்த இவர், அங்கு ஏற்பட்ட உட்கட்சி மோதலில் தினகரன் அணிக்கு சென்றார். அங்கும் அவர் இரண்டாம் கட்ட தலைவராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் நிதி விவகாரம் தொடர்பாக தினகரனுக்கும் செந்தில்பாலாஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு திமுக முகாமிற்கு தாவினார். திமுகவிற்கு இவரது வருகையை முக்கியமானதாக கருதினார் மு.க.ஸ்டாலின். காரணம், செந்தில்பாலாஜி தீவிர களப்பணியாளர், தேர்தல் ஸ்பெலிஸ்ட் என்றெல்லாம் அவரை பற்றி கே.என்.நேரு முன்னுரை கொடுத்து வைத்திருந்தார்.

ஆனால் செந்தில்பாலாஜி மீதிருந்த இமேஜ் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுக்கு நூறாக உடைபட்டது. அதன்பின்னர் அவரை பற்றி பல்வேறு புகார்கள் ஸ்டாலின் காதுக்கு சென்றன. இதனிடையே அதிமுகவுக்கு துணை போன அதிகாரிகளால் தான் கரூர் மாவட்டத்தில் திமுக தோல்வியை தழுவியதாக செந்தில்பாலாஜி விளக்கம் கொடுத்தார். அதை அரைமனதோடு ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், இன்னும் கவனமா இருங்க எனக் கூறி கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டுமாறு செந்தில்பாலாஜிக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தன் மீதான வழக்குகளையும், அதிமுக கொடுக்கும் குடைச்சலையும் சமாளிக்கவே செந்தில்பாலாஜிக்கு நேரம் போதவில்லை என்றும், இதில் அவர் எங்கிருந்து கட்சிப்பணிகளை கவனிக்க முடியும் எனவும் கொதிக்கின்றனர் கரூர் உ.பி.க்கள். மேலும், இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியுடன் இணைந்து அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாகவும், எந்நேரமும் இப்படி மோதல் போக்கை கடைபிடித்தால் அதிகாரிகள் எப்படி திமுகவை விரும்புவார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
கட்சித்தலைமையை அழைத்துவந்து பணம் செலவழித்து நிகழ்ச்சிகள் நடத்தினால் மட்டும் கட்சி வளர்ந்துவிடுமா என்றும், அதிகாரிகளை அனுசரித்து சுமூக உறவு பேணினால் தானே திமுக வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என கூறுகிறார் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய நிர்வாகி ஒருவர்.












Click it and Unblock the Notifications