எங்கே போனார்? கரூர் மாணவி தற்கொலை.. குமுறிய மாணவர்கள்.. சட்டென விசிட் அடித்த செந்தில் பாலாஜி!
கரூர்: கரூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார்.
கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தனக்கு பாலியல் ரீதியாக நடந்த கொடுமைகள் காரணமாக அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை தமிழ்நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் இனி யாருக்கும் நேர கூடாது. பாலியல் கொடுமைகளால் சாகும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பற்றி பேசுவதற்கு கூட அச்சமாக இருக்கிறது என்று அவர் கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை
கரூர் சைபர் கிரைம் டிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவியின் செல்போனை கைப்பற்றி பல கோணத்தில் இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மாணவியின் தற்கொலை குறித்து புகார் அளிக்கச் சென்ற மாணவியின் பெற்றோர்களை தகாத வார்த்தையில் திட்டி இரவு முழுக்க காவல் நிலையத்தில் அமர வைத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசனை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்து உள்ளது.

கண்டிப்பு
காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மாணவியின் பெற்றோர் அளித்த புகார் பற்றி விசாரிக்காமல் தட்டிக்கழித்துள்ளார். அதோடு புகார் அளிக்க வந்த மாணவியின் குடும்பத்தை தரைகுறைவாக நடத்தி உள்ளார். மாணவியின் தாயாரை, நீங்கதான் அக்யுஸ்ட், உங்களுக்கு யார் சேர் போட்டது என்று திட்டி இருக்கிறார். இது பெரிய சர்ச்சையான நிலையில், விமர்சனங்களை தொடர்ந்து மாணவியின் தற்கொலை தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

போராட்டம்
இந்த நிலையில் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் அப்பகுதி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து கருப்பு உடை அணிந்து கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டம் செய்தனர். மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தையில் திட்டிய காவல் ஆய்வாளர் கண்ணதாசனை கைது செய்ய வேண்டும். வேடிக்கை பார்க்கும் தமிழக அரசே மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்கு என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்
இந்த போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாணவ, மாணவியர், போலீஸ் அதிகாரி கண்ணதாசனை உடனே கைது செய்ய வேண்டும். இங்குள்ள அமைச்சருக்கு நாங்கள் வாக்களித்து எம்.எல்.ஏ மந்திரி ஆக்கினோம், ஆனால் நான்கு தினங்களாகியும் அந்த உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல கூட செல்லவில்லை. காங்கிரஸ், அதிமுக, பாஜக, பா.ம.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அந்த உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாருக்கு ஆறுதல் கூறிவிட்டனர்.

வரவில்லை
ஆனால் மாணவியின் வீட்டிற்கு கரூரை சேர்ந்த அமைச்சர் வரவில்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சரி, உடனடியாக அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டுமென்றும். காவல்துறை இதில் பாரபட்சம் காட்ட கூடாது என்றும் மாணவர்கள் பேட்டியில் குறிப்பிட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாணவியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவிக்காததை மாணவர்கள் இப்படி விமர்சனம் செய்து இருந்தனர்.
Recommended Video

செந்தில் பாலாஜி
இந்நிலையில், இந்த சம்பவமறிந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி, நேற்று இரவு கரூர் மாணவியின் பெற்றோரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். குற்றவாளியை கண்டிப்பாக கண்டுபிடிப்போம். கவலை அடைய வேண்டாம். போலீஸ் விசாரணை நடக்கிறது. அரசு உங்களுக்கு துணையாக இருக்கும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications