தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை.. செந்தில் பாலாஜி பேட்டி!
கரூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதேபோல் கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவுள்ளதாக கூறிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 3வது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த சூழலில், சுமார் 5 மணி நேரம் தாமதமாக வந்து மதியம் 2.40 மணியளவில் பேசினார். இதனைத் தொடர்ந்து கரூர் சென்ற விஜய்யை பார்க்க கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் வந்துள்ளது.

விஜய் பேசிவிட்டு புறப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் விஜய் பிரச்சாரம் முடிவடைந்து புறப்பட்ட சூழலில், மயக்கம் அடைந்த பலரும் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், 35க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உரிய சிகிச்சைகளை வழங்க மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 58 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தபின் உடனடியாக மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். நாளை காலை முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரவுள்ளார்.
அதேபோல் 46 பேர் தனியார் மருத்துவமனையிலும், 12 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நம்முடைய மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அனைவரும் உடனடியாக பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் கூடுதலாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் இரவுக்குள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். எந்த சிகிச்சையாக இருந்தாலும் எந்த கட்டணமும் வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளோம். எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்துளார்.












Click it and Unblock the Notifications