அண்ணாமலைக்கு ஷாக்.. கரூர் பாஜகவை மொத்தமாக தூக்கிய செந்தில் பாலாஜி
கரூர்: 2026 சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை எட்டுக்கால் பாய்ச்சலில் திமுக தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள நிலையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அதிமுக மற்றும் பாஜகவில் இருந்து ஏராளமானோர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணைந்து வருவது அரசியல் கட்சியினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாவட்ட வாரியாக கள ஆய்வு உள்ளிட்ட பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை.

ஆனால், இந்த முறை விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக தலைவர் ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் களத்தில் இறங்கியுள்ளனர். இதனால்தான் கள ஆய்வைக் கூட கோவை மாவட்டத்தில் இருந்தே தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் கோவையில் அவர் தலைமையில் முதல் அரசு விழா கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கான பணிகளில் நாம் ஏற்கெனவே இறங்கிவிட்டோம். கோவையில் சிறப்பாக செயல்படுவதற்காக கம்பேக் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறார் என்று கூறினார்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளது திமுகவினரிடையை பெரும் பலத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. கட்சியில் இணைந்த உடனே அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் வெற்றி, மாவட்டச் செயலாளர் பதவி என்று செந்தில் பாலாஜி டாப் கியரில் பறக்க தொடங்கினார்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், செந்தில் பாலாஜிக்கு ஜாக்பாட்டாக மின்சாரம், டாஸ்மாக் துறையின் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கூடவே கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. சீனியர் அமைச்சர்களே அப்செட்டாகும் அளவுக்கு செந்தில் பாலாஜி வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்றது.
இதனிடையே, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. 470 நாட்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்துள்ள நிலையில் கட்சிப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தன் கட்சிகளில் இணைப்பதில் திறமை வாய்ந்தவர் செந்தில் பாலாஜி. அதுதான் அவரது பலமும் கூட.
சிறைக்குச் செல்வதற்கு முன்பு கூட மாற்று கட்சியினரை திமுகவில் இணைப்பதற்கான பொதுக் கூட்டம் ஒன்றை அவர் பொள்ளாச்சியில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில், கீழ்பாக்கம் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில் வார்டு பிரதிநிதிகள் ரஞ்சித் குமார், ராஜேஷ் குமார், அன்பு, கண்ணையன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
அதேபோல, அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய மாவட்ட நிர்வாகி கணேசமூர்த்தி தலைமையில் பாஜக முன்னாள் நிர்வாகிகள் உள்பட 200 பேரும் நெரூர், மலைக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிமுக, பாஜகவைச் சேர்ந்த 100க்கு மேற்பட்டோரும் என அக்கட்சியிலில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
கரூர் மாவட்டத்தின் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார்.












Click it and Unblock the Notifications