ஆமாஞ்சாமி போட முடியாது! அமைச்சர் இல்லாத ஊரு அச்சாணி இல்லாத தேரு! கரூர் மாவட்ட திமுகவில் கலகம்!
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் நிலையில், கரூர் மாவட்ட திமுகவில் கோஷ்டிப்பூசல் தலைதூக்கி கலகம் வெடித்துள்ளது.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளரான லோகு.

தன்னால் பதவிக்காக ஆமாஞ்சாமி போட முடியாது என்று கடிதத்தில் கூறியுள்ள லோகு, அமைச்சர் இல்லாத ஊரு அச்சாணி இல்லாத தேரு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக லோகு எழுதியுள்ள கடிதம் விவரம் வருமாறு;
அனுப்புநர்:
L.G.லோகு, திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி.
பெறுநர்:
திரு.P.R. இளங்கோ , அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
பொருள்: எனது பணி இராஜினாமா தொடர்பாக-
''அண்ணா வணக்கம்,
நான் தகவல் தொழில் நுட்ப அணிதுவங்கியது முதல் பணியாற்றி வருகிறேன். தகவல் தொழில்நுட்ப அணி துவங்கியது முதல் எனது பணியை நூறு சதவீதம் நிறைவேற்றியதை அமைச்சர் அண்ணன் திரு. V.செந்தில் பாலாஜி அவர்களுக்கும் மற்றும் கழகத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படை தொண்டர்கள் வரை அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது என் அர்ப்பணிப்பும், உழைப்பும் சற்று தொய்வான நிலையை தாங்களே அறிவீர்கள்.
1. எதிர்கட்சியாக இருந்த போது தொகுதி ITWING அணி நிர்வாகிகளை சரியான முறையில் வழிநடத்தி தெளிவான கட்டமைப்பில் வைத்து கழக பணிகளை செய்ய தூண்டுதலாய் இருந்தேன்.
2. சமீபகாலமாக மாவட்ட அணி அமைப்பாளர் அவர்கள், மற்றும் நிர்வாகிகள் எந்த ஒரு தகவல்களும் என்னிடம் கூறுவது இல்லை.
3. எனது பணியை எனக்கு அடுத்தபடியாக உள்ள நிர்வாகிகளிடம் சொல்கிறார்கள் என்னிடம் கூறுவது இல்லை.
4. கழகத்திற்காக என்மீது சுமத்தப்பட்டவழக்குகளுக்கு இன்று வரை நீதிமன்றத்திற்கு சென்று வாய்தா பெற்றுக் கொண்டு தான் உள்ளேன்.
5. சிலகழக நிகழ்ச்சிகளில் கரூர் மாவட்டத்தில் தான் அரவக்குறிச்சி தொகுதி உள்ளதா, இல்லை மாவட்ட அணி நிர்வாகிகள் மறந்து விட்டார்களா என்ற கேள்விகளும் என்னுள் எழுந்துள்ளது.

6.தற்போது கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைச்சர் இல்லாத ஊரு அச்சாணி இல்லாத தேரு போல உள்ளது அண்ணா. இவர்களுடன் பயணிப்பது மிகக்கடினம்.
7. இந்த பொறுப்பிற்காக அவர்களிடம் ஆமாம் சாமி போடா என்னால் இயலாது அண்ணா.
8.நான் நமது தொகுதிதகவல் தொழில் நுட்ப அணியை முன்பு எப்படி வைத்து இருந்தேன் என்பதை தற்போது உள்ள ஒன்றிய, நகர, பேரூர்கழக அணி
நிர்வாகிகளிடம் கேட்டு விசாரித்து பார்த்தாலே தாங்கள் அறிவீர்கள் அண்ணா,
9.அதிமுக அடிமைகள் போல என்னால் இவர்களுடன் இருக்க இயலாது.
10. எனது உழைப்பிற்கு இல்லாத பதவி நடிப்பவருக்கே எனும் சூழ்நிலை தற்போது உள்ளது. ஆதலால், நான்தகவல் தொழில் நுட்ப அணிதொகுதி பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications