நீங்கள் SC/ST பிரிவினரா? தொழில் தொடங்க கடனுதவி! ரூ 1 கோடி மானியம்! தமிழக அரசின் சூப்பர் திட்டம்
கரூர்: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SCHEME - AABCS) என்ற புதிய திட்டத்தினை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.33, நாள்: 12.05.2023-ல் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

என்னென்ன தொழில்கள்
உணவு பதப்படுத்தல், தென்னைநார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில். மளிகை கடை வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம். வாடகை கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்படும். மானியம் மொத்த திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு உற்பத்தி தொழிலுக்கு ரூ.100 இலட்சம், சேவை தொழிலுக்கு ரூ.75 இலட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ரூ.50 இலட்சம் மேலும் கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் (10 ஆண்டுகளுக்கு மிகாமல்) 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
தொழில் ஆணையர்
மேலும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.9816/DIC-1/2025.நாள்: 24.04.2025 இன் படி ஈர்த் மூவர்ஸ், ஜேசிபி, டிப்பர், லாரி, டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள், பேருந்து, கான்கிரீட் மிக்சர். ரிக் போரிங் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற தகுதியற்றவை என வரையறைபடுத்தபட்டுள்ளது.
தொழில் முனைவோர்
தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த எந்த தனிநபரும் மற்றும் பங்குதாரர், கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வி தகுதி ஏதுமில்லை. வயது வரம்பு 18 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் கடனுதவி பெற முடியும்.
இணையதள முகவரி
இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் பயனாளிகள் (www.msmeonline.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற பொது மேலாளர். மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர். தாந்தோணிமலை, கரூர் அலுவலகத்தினை நேரடியாகவோ 04324 255 177/255179 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications