கரூரில் வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் பலி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
கரூர்: வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவியைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனகராஜ் என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
3 விவசாய சட்டங்களை திரும்பப்பெற ஒரே மசோதா.. MSP விஷயத்தில் மத்திய அரசு முடிவு இதுதான்.. பரபர தகவல்
திங்கள் அன்று வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து அருகில் உள்ள கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அடையாளம் தெரியாத வாகனம்
அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனம் ஒன்றை கனகராஜ் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் அவர் மீது பலமாக மோதி விட்டுச் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ஆய்வாளர் கனகராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிரிழந்தார்
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் ஆய்வாளர் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில் உயிரிழந்த கனகராஜின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ரூபாய் ஐம்பது லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், "கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ், கரூர் திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியில் இருந்த போது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ரூ 50 லட்சம்
கனகராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர், பணியில் இருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தம் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த கனகராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறப்பட்டுள்ளது.