கல்லூரிக்கு சென்ற மாணவியின் கால் துண்டான கதை! கை கொடுக்குமா அரசு!
கரூர் : திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கிய மாணவியின் கால்துண்டானதால் படிப்பை தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.
Recommended Video
தனக்கு செயற்கை கால் பொறுத்த பணம் வேண்டும் என சமூக வலைதளங்களில் அந்த மாணவி உதவி கேட்டு வரும் நிலையில், உடனடியாக அரசு தலையீட்டு அவருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கரூரைச் சேர்ந்த மாணவி
கரூர் மாவட்டம் எழுத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு தனலட்சுமி என்கின்ற மனைவியும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர். தம்பதி இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள். மகள் ஷாலினி 10ம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை திண்டுக்கல் மாவட்டம் காசிபாளையத்தில் உள்ள பள்ளியிலும் படிக்கவைத்துள்ளனர்.

விளையாட்டிலும் மாணவிக்கு திறமை
17 வயதான மாணவி ஷாலினி படிப்பில் மட்டும் கவனம் செலுத்துபவர் அல்ல. ஓட்டப் பந்தயம், கோகோ, நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் 12ம் வகுப்பு முடித்த மாணவி ஷாலினி கல்லூரியில் சேர்வதற்காக முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது ஆதார் கார்டில் முகவரியில் பிழை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கல்லூரி நிர்வாகம் ஆதார் கார்டில் திருத்தம் செய்து வருமாறு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 19ம் தேதி மாயகண்ணன் என்பருடன் மோட்டார் பைக்கில் இசேவை மையத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கிய மாணவி
வேடசந்தூர் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஷாலின் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மாயகண்ணன் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் படுகாயமுற்ற ஷாலினி முதலில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஷாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

கால்களை இழந்தார் ஷாலினி
ஆனாலும் விபத்தில் ஷாலினியின் கால்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் வேறு வழியின்றி அவற்றை அகற்ற வேண்டியதாயிற்று. அதுமட்டுமின்ற அவரது தாடை, பற்கள் என முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அக்கறையாலும் குடும்பத்தாரின் ஆதரவினாலும் ஷாலினி படிப்படியாக தேறி வருகிறார். தற்போது ஷாலின் சொந்த ஊரான கரூர் மாவட்டம் எழுத்துப்பாறையில் வசித்து வருகிறார். கால்களை இழந்துள்ளதால் அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் பெற்றோர்தான் பார்த்து வருகின்றனர்.

எப்படியாவது படிக்க வேண்டும்
ஆனாலும் படிப்பின் மீதான ஆர்வம் ஷாலினிக்கு குறையவில்லை. எப்படியாவது படித்து முன்னேறவேண்டும். ஆனால் என்ன செய்வது கால்கள் இல்லை. நடக்கவும் முடியாது. பண வசதியும் இல்லை. எனவே ஷாலின் தற்போது உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தனக்கு செயற்கைக் கால்கள் பொருத்த நிதி உதவி வழங்குமாறு கேட்டு வருகிறார்.

மாணவியின் வீடியோ வைரல்
இதற்காக ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த துயரத்தையும், அதனால் செயற்கைக் கால்கள் பொறுத்தவும் கல்லூரியில் சேரவும் நிதி அளிக்குமாறு நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அரசு உதவுமா?
எனவே இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு ஷாலினியின் வீட்டிற்கே சென்று தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லா வாகனங்களுமே 100 கிமீ வேகத்தில்தான் வரும். எனவே சாலையை கடப்பவர்கள் சிறிது நேரம் காத்திருந்து கடந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆளில்லாத ரயில்வே கேட் போலத்தான். நாம் கொஞ்சம் ஜாக்கிரதையுடன் சென்றால் ஷாலினி போன்றவர்கள் கல்விக் கனவு பலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications