தமிழகத்தில் ஒரே நாளில் மின்னல்தாக்கி 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி- அறந்தாங்கி, கோவில்பட்டியில் சோகம்!
கோவில்பட்டி/ புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இடி மின்னல்தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 2 பேர் மாணவர்கள்.
தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கி அருகே மின்னல்தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிசோரமில் கல்குவாரி மலை மொத்தமாக இடிந்து விழுந்தது!15 பீகார் தொழிலாளர்கள் கதி என்ன? அதிர்ச்சி வீடியோ
2 மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது அண்ணன் குழந்தைகள் சஞ்சய்,சஞ்சனா இருவரும் திருப்புனவாசலில் உள்ள ராமகிருஷ்ணா விவேகானந்தா மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். சஞ்சய் பதினொன்றாம் வகுப்பும் சஞ்சனா 10ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பள்ளி முடிந்து தங்களது சித்தப்பா இளையாராஜாவின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போது மூன்று பேரையும் இடிமின்னல் தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
ஒரே குடும்பம்
சஞ்சனா, சஞ்சய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளையராஜாவை மீட்டு திருப்புனவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடலும் தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் அவரது அண்ணன் குழந்தைகள் சஞ்சய், சஞ்சனா மொத்தம் மூன்று பேரும் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பறையத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி விபரீதம்
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (47), ஆஞ்சநேயர் என்பவரது மனைவி ஈஸ்வரி (40), பொன்மாரியப்பன் என்பவரது மனைவி தங்கமாரியம்மாள், பாலகுருசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி (35), துரைப்பாண்டியன் என்பவரது மகன் மகாலிங்கம்(27) ஆகியோர் இன்று மாலை வழக்கம் போல் விவசாய பணியை முடித்துவிட்டு எம்.வெங்கடேஷ்வரபுரம் -மார்த்தாண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் ஈஸ்வரி,தங்கமாரியம்மாள், முருகலட்சுமி, மகாலிங்கம் ஆகியோர்களுக்கு பற்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அனைவருக்கும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசாா்,தாசில்தாா் சசிகுமாா், மார்த்தாண்டம்பட்டி விஏஓ செல்வக்குமாா் ஆகியோா் உயிரிழந்த மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ்(24) என்ற மகனும் தங்கமாரி(22) கன்னிகா(18) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.