கரூரில் காதல் கல்யாணம் செய்த புதுமாப்பிள்ளை.. எமனாக மாறிய மனைவியின் துப்பட்டா.. என்ன நடந்தது?
கரூர்: கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 23 வயதாகும் ஹிர்திக் என்பவர், ஐ.டி. நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அண்மையில் தனது மனைவியுடன் வீட்டில் துப்பட்டாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். கழுத்தில் துப்பட்டாவை போட்டு விளையாடிய போது, யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
திருமணமான புதிதில் சிலர் விளையாட்டுத்தனமாக செய்யும் சில காரியம் வில்லங்கமாக முடிந்துவிடுகிறது. நாம் செய்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் குறும்புத்தமாக செய்கிறார்கள். அதனால் தங்கள் துணைக்கு தாங்காத வலியை ஏற்படுத்தி விடுகிறார்கள். சென்னையில் ஒரு முறை புதிதாக திருமணமான பெண், கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு, மிரட்டும் நோக்கில் சேலையில் கழுத்தை மாட்டி நின்றார். சும்மா விளையாட்டுத்தனமாக செய்த அந்த செயல் விபரீதம் ஆனது. கழுத்து நெருக்கியதில் சில நிமிடங்களில் புதுப்பெண் உயிரிழந்தார்.

இதேபோல் சென்னையில் சில வருடம் முன்பு காதல் திருமணம் ஆகி ஓராண்டே ஆன நிலையில், மனைவி குடிக்க பணம் தரவில்லை. இதனால் மனைவியை மிரட்டுவதற்காக பைக்கில் பெட்ரோலை எடுத்து வந்து சும்மா விளையாட்டாக சட்டையில் ஒருவர் சில துளிகள் தான் தெளித்தார். பின்னர் தீக்குச்சியை எடுத்து வைத்து உரசுவது போல் நடித்தார். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக கையில் இருந்த பெட்ரோல் காரணமாக குப்பென்று தீப்பிடித்தது. இதில் மனைவி கண் முன்னே கணவன் இறந்து போனார். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன.
அப்படித்தான் கரூரில் ஒரு புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹிர்திக் (வயது 23). ஐ.டி. நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அண்மையில் தனது வீட்டில் மனைவியுடன் துப்பட்டாவை பயன்படுத்தி விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக துப்பட்டா ஹிர்திக் கழுத்தை இறுக்கியது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஹிர்திக்கை மீட்டு சிகிச்சைக்காக காந்தி கிராமத்தில் உள்ள கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த ஹிர்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.
இதையடுத்து ஹிர்திக் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், வீட்டில் மனைவியுடன் விளையாடி கொண்டிருந்தபோது, துப்பட்டா கழுத்தில் இறுகி புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications