லியோ படம் ரிலீஸில் சிக்கல்..கர்நாடகாவில் 2 தியேட்டர்களிடையே வெட்டு குத்து மோதல்- ரசிகர்கள் ஆவேசம்!
கோலார்: கர்நாடகா கோலாரில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை திரையிடுவதில் இரு தியேட்டர் உரிமையாளர்களிடையே பெரும் அடிதடி மோதல் நிகழ்ந்தது. இதனால் கோலாரில் ஒரு தியேட்டர் மூடி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஆவேசம் அடைந்து போராட்டம் நடத்தினர்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கர்நாடகாவிலும் தடைகளை மீறி லியோ திரைப்படம் வெளியானது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக கன்னட சலுவாளி கட்சியின் வாட்டாள் நாகராஜ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் ஓசூர் எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தவும் வாட்டாள் நாகராஜ் முயற்சித்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வட்டாள் நாகராஜ், கர்நாடகாவில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை திரையிடமாட்டோம். தமிழ்நாடு அரசு, காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டால்தான் விஜய் படத்தை திரையிட அனுமதிப்போம் எனவும் வாட்டாள் நாகராஜ் கூறியிருந்தார். இந்த எதிர்ப்பை மீறிதான் கர்நாடகாவிலும் லியோ வெளியிடப்பட்டது.
முன்னதாக கோலாரில் ராபர்ட்சன்பேட்டை தியேட்டர் ஒன்று இந்த படத்தை திரையிடுவதாக அறிவித்தது. ஆனால் ஆன்டர்சன்பேட்டை தியேட்டருக்குதான் லியோ படம் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ராப்டர்சன்பேட்டை விநியோகஸ்தர், ஆன்டர்சன்பேட்டை தியேட்டருக்கு உள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுக்க தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆன்டர்சன்பேட்டை தியேட்டர் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி தியேட்டரும் சீல் வைக்கப்பட்டது.
இந்த அக்கப்போரினால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆன்டர்சன்பேட்டை தியேட்டர் முன்பாக ஏற்கனவே விஜய் ரசிகள் பேனர்கள் கட்டி கொண்டாட்டத்துக்கும் ஏற்பாடு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அந்த தியேட்டரை முற்றுகையிட்டு உடனே தியேட்டரை திறந்து படத்தை வெளியிட்டாக வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன் சீல் வைக்கப்பட்ட தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications