தமிழை உயர்த்தி பிடித்தவர் ஏஆர் ரஹ்மான்.. உருதை அல்ல.. பாஜகவிற்கு அதிமுக கே.பி.முனுசாமி குட்டு
கிருஷ்ணகிரி: ‛‛இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறும்போது தனது தாய்மொழியை உயர்த்தி பேசினார். விழா மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழ் மொழியில் தான் கூறினார். உருது மொழியில் சொல்லவில்லை'' என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறினார்.
டெல்லி பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்து பேசினார்.
அப்போது ‛‛இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
தம்பி ரஹ்மான்! எல்லாம் சரிதான்! முதல்ல உங்கள் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றுங்க! பாஜக பிரமுகர்
ரஹ்மான் டுவிட்
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தி பேசாத மாநில அரசியல் தலைவர்கள் அமித்ஷாவையும், மத்திய அரசையும் விமர்சித்தனர். மேலும் புதிய ரூபத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ‛இசைப்புய்ல', ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் ஒரு டுவிட் செய்திருந்தார். அதில் கருமை நிற பெண் திரிசூலத்துடன் இருப்பது போலவும், திரிச்சூலத்தின் உச்சியில் தமிழ்மொழியின் சிறப்பு அடையாளமான 'ழ' இடம் பெற்றிருந்தது. மேலும் ‛தமிழணங்கு' எனவும் ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்'' என பாரதிதாசன் வரி குறிப்பிடப்பட்டு இருந்தது.
போலீசில் புகார்
இந்த பதிவில் இருந்த பெண் தமிழன்னை என கூறப்பட்டது. தமிழர்களின் நிறத்தில் தமிழன்னை படம் இடம் பெற்றதாகவும், ரவுரத்திற்காக காளியின் தோற்றத்தில் இது இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த டுவிட்டர் பதிவு பேசும்பொருளானது. தமிழன்னை படத்தை அவமானப்படுத்தியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏஆர் ரஹ்மான் மீது முத்து ரமேஷ் என்பவர் புகார் அளித்தார். மேலும் ஏஆர் ரஹ்மானுக்கு பாஜகவிலும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக தரப்பில் ஏஆர் ரஹ்மான் தனது பெயரை தமிழுக்கு மாற்றட்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ரஹ்மான் பற்றி முனுசாமியிடம் கேள்வி
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஏஆர் ரஹ்மான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேபி முனுசாமி கூறியதாவது: சினிமா துறை என்பது பல்வேறு உயர்வான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் அறியாமையை போக்கும் ஊடகம். இந்த சினிமா துறை மூலம் தான் அண்ணாவின் கருத்துக்களை எம்ஜிஆர் திரைப்படங்கள் வாயிலாக பாமர மக்களுக்கு எடுத்து கூறினார். பாமர மக்கள் மாற மிகப்பெரிய ஆயுதமாக திரைப்படத்துறை உள்ளது.
தமிழை உயர்த்தி பிடித்த ரஹ்மான்
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களில் ஏறக்குறைய 70 சதவீதம் பேர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்களை பெயர் மாற்றி வரும்படி கூறுவது எந்த வகையில் நியாயம். ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறும்போது தனது தாய்மொழியை உயர்த்தி பேசினார். விழா மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழ் மொழியில் தான் கூறினார். உருது மொழியில் சொல்லவில்லை. அதனால் தாய்மொழியை எங்கு, எப்படி, எந்த சூழ்நிலையில் உயர்த்தி பிடிப்பது என்பது ஒவ்வொரு மொழிப்பற்றாளனுக்கும் இருக்கும் இயற்கையான குணாதிசயம். இதில் வேறு வித சிந்தனையுடன் கருத்துகள் கூறுவது நல்லது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.