சேலத்தில் அடுத்த மாநாடு நடத்தலாம்! ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெங்களூரு புகழேந்தி தரும் புது ஐடியா!
கிருஷ்ணகிரி: திருச்சி மாநாடு வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்த மாநாட்டை சேலத்தில் நடத்தலாம் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெங்களூரு புகழேந்தி புது ஐடியா கொடுத்து வருகிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தவுள்ள நிலையில் அதற்கு போட்டியாக சேலத்தில் மாநாட்டை நடத்தி பலத்தை காட்டலாம் என ஓ.பி.எஸ்.ஸிடம் பெங்களூரு புகழேந்தி வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய புகழேந்தி சேலத்தில் மாநாடு நடத்துமாறு தாம் வலியுறுத்தி வருவதை மறுக்கவில்லை.
மேலும், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களை உள்துறை அமைச்சர் எப்படி சந்திக்கலாம் என வினவினார்.
இது தொடர்பாக பெங்களூரு புகழேந்தி கூறியதாவது; ''கே.பி. முனுசாமி ஐந்து வருட காலம் இருந்த ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்து வீணடித்தார். இந்தப் பதவியை அவர் வீட்டில் வேலை வேலை செய்யும் டிரைவருக்கோ அல்லது அதிமுகவின் சாமானிய தொண்டனுக்கோ அவர் கொடுத்திருக்கலாம்.''
''கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் தேசியக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எங்களிடம் கழக ஆதரவை கேட்டு வருகின்றனர். பாஜகவும், காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் ஆதரவை கேட்டு வருகிறார்கள், யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என முடிவு எடுப்பவர் ஓபிஎஸ்' ஓபிஎஸ் அறிவித்தால் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு கூட ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்''.

''அடுத்த மாநாட்டை சேலத்தில்தான் நடத்த வேண்டும் என நான் ஒபிஎஸிடம் கோரிக்கை வைத்துள்ளேன், திருச்சி மாநாட்டில் நான் பேசாததற்கு, நேரமின்மையே காரணம். நானும் மருது அழகுராஜும் அடுத்த மாநாட்டில் பேசுவோம். எந்த கட்சியாக இருந்தாலும் மதித்தால் மதிப்போம் மிதித்தால் மிதிப்போம்.'' இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications