அண்ணாமலையுடன் கூட்டணி வைத்தவர்.. எங்களை அழைக்க ஓபிஎஸ்-க்கு உரிமை இல்லை.. அதிமுக கொடுத்த பதிலடி!
கிருஷ்ணகிரி : அண்ணாமலையுடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ், எங்களை அழைக்க உரிமையில்லை என்று அதிமுகவின் கேபி முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற அதிமுகவுக்கு, இம்முறை ஒரு தொகுதி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் 12 தொகுதிகளுக்கும் மேல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை, கோவை, நெல்லை, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிமுக வேட்பாளர்கள் 7 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்று சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து கேபி முனுசாமி பேசுகையில், சசிகலா வெளியிட்ட அறிக்கையை பார்த்தேன். அவர் ஜெயலலிதாவிடம் பணி செய்வதற்காக சென்றவர். அதன்பின் அங்கேயே ஜெயலலிதா பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர்.
சசிகலா வெளியிட்ட அறிக்கை வெளி வந்து 24 மணி நேரமாகிவிட்டது. இதுவரை எத்தனை பேர் சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா முயற்சிக்கிறார்கள். 2019 லோக்சபா தேர்தலை விடவும் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக அதிகளவிலான வாக்குகளை கைப்பற்றியுள்ளது. அதிலும் இம்முறை தேமுதிகவுடன் மட்டுமே கூட்டணி வைத்திருந்தோம். வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி கொள்கிறேன்.
அண்ணாமலையின் செயல்பாட்டுக்கும், பேச்சிற்கும் வித்தியாசம் மலையளவு உள்ளது. கோவையில் எவ்வளவு செலவு செய்தார் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும். அண்ணாமலை பொய் சொல்வதில் வல்லவர். பாஜகவுக்கு கூடுதலான வாக்கு சதவிகிதம் வந்ததற்கு தனி நபர் செல்வாக்கும், பணபலமும் காரணம். உண்மையான வாக்கு சதவிகிதம் சட்டப்பேரவை தேர்தலில் தெரியும்.
நிச்சயம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும். நாங்கள் மக்களின் நலன் கருதியே பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டோம். எம்ஜிஆர் பாடலை பாடி ஒன்றுபட வேண்டும் என்று பேசுவதற்கு கூட ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை. ஜெயலலிதாவை தவறாக பேசிய அண்ணாமலை உடன் அமர்ந்த ஓபிஎஸ்-க்கு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications