தொப் தொப்பென.. மயங்கி விழுந்த மாணவர்கள்.. பெற்றோர்கள் ஒரே அலறல்.. விஷவாயுவா? கதிகலங்கும் கிருஷ்ணகிரி
அரசு பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் அடுத்தடுத்து திடீரென மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. பள்ளி வளாகத்திற்குள் விஷ வாயு பரவியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதற்கு மேல் பரபரப்பை கூட்டி கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் காலனியில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.. இங்கு சுமார் 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியில் இன்று மதியம் திடீரென ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது... தலைசுற்றி அந்த மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர்..
திடீர் மயக்கம்
இதனால் பதறிப்போன ஆசிரியர்கள், அந்த மாணவர்களை மீட்டு, உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.. முதலுதவியும் அந்த மாணவர்களுக்கு தரப்பட்டது.. பிறகு நடந்தது குறித்து அந்த மாணவர்கள் சொன்னபோது, கிளாசுக்குள் வித்தியாசமான ஒரு வாசனை தெரிந்ததாம்.. அதற்கு பிறகுதான், தங்களுக்கு வாந்தி, மயக்கம் உடனே ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.. இவர்கள் மட்டுமில்லாமல், அந்த ஸ்கூலில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் இதுபோலவே அறிகுறிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது..
GAS
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், பள்ளி வளாகத்திலும், சுற்றுவட்டார பகுதியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்... இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பிற மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது..
எலக்ட்ரோலைட்
இதனிடையே, அந்த ஸ்கூலில் இருக்கும், மற்ற மாணவர்கள் அருகில் உள்ள ஆண்கள் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்... அங்கு அவர்களுக்கு ஓஆர்எஸ் எனப்படும் எலக்ட்ரோலைட் பானங்கள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி வளாகத்திற்கு முன்பு குவிந்துவிட்டதால் பரபரப்பும் அதிகமாகிவிட்டது.. சம்பவ இடத்திற்கு ஓசூர் மாநகராட்சி ஆணையர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்...
கிறுகிறுப்பு
புதுவித வாசனை வந்ததாக மாணவர்கள் சொல்லி உள்ளதால், அநேகமாக விஷவாயு பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. அதனால், பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து விஷவாயு கசிந்ததா? என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. ஆனால், அப்படி எந்த கசிவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.. அப்படியானால் வேறு ஏதேனும் வழிகளில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா, அல்லது மாணவர்கள் சாப்பிட்ட உணவின் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணையை துவக்கி உள்ளனர்..