தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் கொரோனா கட்டுக்குள் வரும்.. எடப்பாடி பழனிச்சாமி உறுதி
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் 10 நாட்களில் கட்டுபடுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஓசூர் பன்னாட்டு மலர்கள் ஏற்றுமதி மைய அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பரிசோதனை
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலமாக தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை மாநில அரசு குறைத்துள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய், விலையில்லா உணவு பொருட்கள், மருத்துவப் பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.

ரேஷன் அரிசி
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4 லட்சத்து 18 ஆயிரத்து 900 பேர் பத்திரமாக சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க பட்டனர். மத்திய அரசு தன் பங்காக, 672 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள், ஜன் தன் வங்கி தொகை, விலையில்லா ரேஷன் அரிசி, கோதுமை, சர்க்கரை , இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, போன்றவற்றிற்கு 2314 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

இந்தியாவில்
மேலும் விவசாயிகளுக்கு மூன்று தவனையாக தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் மத்திய அரசு வழங்கி வருகிறது. விலையில்லா உணவு பொருட்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு தடையின்றி வழங்க பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவ முகாம்கள்
கொரோனோ தடுப்பு மற்றும் உபகரணங்கள் வாங்கவும், உதவி தொகைக்கு என 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசு 6 ஆயிரம் ரூபாய் கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. சென்னையில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணம்
வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்ய 30 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டு காய்ச்சல், சளி, இருமல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அளவில் படிப்படியாக இன்னும் 10 நாட்களில் வைரஸ் தொற்று குறைக்கப்படும். பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். சமூக இடைவெளி, சுகாதாரம், முகாகவசம் அணிந்துக் கொண்டு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications