பள்ளி கூடத்தில் காடுவெட்டி குரு, வீரப்பன்.. பாமக துண்டுடன் நடனம்! ஆசிரியர்கள் மீது பாய்ந்த ஆக்சன்..!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பள்ளியில் சாதிய அடையாளத்துடன் அரசு பள்ளி மாணவர்கள் நடனமாடிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகள், கவிதை, போட்டி, கட்டுரை போட்டி என பல போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தொடர்ந்து தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

அப்போது மாணவர்கள் திடீரென கழுத்தில் பாமக துண்டை போட்டுக்கொண்டு மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற புகழ் இருக்குது பெயர் இருக்குது ராசி படையாட்சி தான் என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நடனம் ஆடும் போது வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த எம்எல்ஏவும் ஆன காடுவெட்டி குரு, சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் படம் பொறித்த டீசர்ட்களையும் அணிந்தபடி நடனமாடி இருக்கின்றனர்.
இதனால் அங்கிருந்த பிற மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாடல் உடனடியாக நிறுத்தப்பட்டு மாணவர்கள் நடனமாட அனுமதிக்கப்படவில்லை. இதை அடுத்து குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் நடனம் ஆடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு நடனமாடியதோடு பாமக துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ஆடியது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய பெற்றோர் இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
தொடர்ந்து இந்த விவகாரம் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அடுத்து அந்தப் பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடியது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார், ஆசிரியர் சுப்பிரமணி ஆகியோர் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் விஜயகுமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னி அள்ளி அரசு உயர் நிலைப் பள்ளிக்கும், ஆசிரியர் சுப்பிரமணி மேட்டுப் புலியூர் அரசு உயர் நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications