பொறுமையிழந்த பள்ளி மாணவர்கள்... ஒசூர் அருகே.. சாலையை மறித்து போராட்டம்! டிராபிக் ஜாம்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லை எனக்கூறி அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
ஓசூர் அருகே பாகலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பாகலூரை அடுத்துள்ள முகலப்பள்ளி, தும்மனப்பள்ளி, ஓட்டப்பள்ளி, பாலிகானப்பள்ளி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
ஏராளமான மாணவர்கள் பயணிக்கும் இந்த வழித்தடத்தில் போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் இதனால் பள்ளிக்கு செல்லவும், பள்ளி முடிந்து வீடு திரும்பவும் காத்திருந்து காலதமாதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் மாலை பாகலூரில் பள்ளி முடிந்ததும் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் பொறுமை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பாகலூர் - பேரிகை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளிக்கு அருகாமையிலேயே காவல் நிலையம் அமைந்து உள்ளதால் உடனே மாணவர்களை அழைத்து சென்று போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேசி, அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் காவல் துறையினர் உறுதி அளித்தனர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் நடத்திய இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.