தேன்கனிக்கோட்டையில் யாரிந்த பெண்? விரட்டி சென்ற கிருஷ்ணகிரி போலீஸ்.. காரில் எட்டிப்பார்த்தால்? அச்சோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது சாய்கீதா விவகாரம்.. யாரிந்த பெண் அதிகாரி? என்ன நடந்தது?
நிலப்பட்டா, பத்திரப்பதிவு போன்ற விவகாரங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே காணப்படுகிறது.. இதை தடுப்பதற்காகவே தமிழக அரசு ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, இதற்கெல்லாம் கடிவாளங்களை போட்டு வருகிறது.

எனினும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி நாளுக்கு நாள் கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது..
பாலாம்பாள்: கடந்தவாரம்கூட, சேலத்தில் பெண் விஏஓ பாலாம்பாள் என்பவர் அசிங்கமாக லஞ்சம் வாங்கி சிக்கினார்.. பனமரத்துப்பட்டியை அடுத்த தும்பல் பட்டியை சேர்ந்த அரவிந்த் என்பவர் சான்றிதழ் கேட்டு, விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், சான்றிதழை தர வேண்டுமானால், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் பாலாம்பாள்.
சம்பவத்தன்று பாலாம்பாள் விஏஓ ஆபீசுக்குள் வராமல், ஆபீசுக்கு வெளியே உள்ள மரத்தடிக்கு பணத்துடன் வருமாறு அரவிந்திடம் சொன்னாராம்.. அப்போதுதான், அரவிந்த் மரத்தடிக்கு 15,000 பணத்துடன் சென்றதுமே, அங்கு ஏற்கனவே தயாராக மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாலாம்பாளை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சார் பதிவாளர்: இதோ கிருஷ்ணகிரியில் ஒரு பெண் அதிகாரி இப்போது சிக்கியிருக்கிறார்.. தேன்கனிக்கோட்டை, சார்பதிவாளராக இருப்பவர் பெயர் சாய்கீதா.. 58 வயதாகிறது..
இவர் அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு லஞ்சம் பெற்று, பத்திரப்பதிவு செய்வதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் தொடர்ந்து சென்றவண்ணம் இருந்தது.. அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பதிவாளர் சாய்கீதாவை கண்காணித்து வந்தனர். அப்படித்தான், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது.
அன்றைய தினம் இரவு லஞ்ச பணத்துடன் சாய்கீதா வீட்டிற்கு செல்வதாக கிடைத்த தகவலின்படி, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சாய்கீதாவின் காரை பின்தொடர்ந்து விரட்டி விரட்டி சென்றார்கள்.. கெலமங்கலம் சாலையில் கார் சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென சாய்கீதாவின் காரை நிறுத்தி, லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளார்.
அதிரடி சோதனை: அந்த பணத்தை பெற்றுக்கொண்டதுமே, சாய்கீதாவின் கார் அங்கிருந்து புறப்பட்டது. இது எல்லாவற்றையுமே, பின்னாடியே விரட்டி சென்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கவனித்திருக்கிறார்கள்.. இறுதியாக, காரை துரத்தி சென்று, கெலமங்கலம் பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே மடக்கி பிடித்தனர். பிறகு சாய்கீதாவின் காரில் அதிரடி சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 500 இருந்துள்ளது.
அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சாய் கீதாவை கைது செய்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சார்பதிவாளர் சாய்கீதா, ஏற்கனவே ஓசூரில் லஞ்ச புகாரில் சிக்கியவராம்.. இப்போது மீண்டும் லஞ்சம் வாங்கி சிக்கி கொண்டுள்ளார். எனவே, சாய்கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில், சார்பதிவாளரின் காரை துரத்திச் சென்று மடக்கி கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளரையும் கைது செய்துள்ளது கிருஷ்ணகிரியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications