கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு! கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமனுக்கு மாவுகட்டு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்பட 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்த போது தப்பியோட முயன்ற போது அவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதையடுத்து, மாவுக் கட்டு போட்டுள்ளனர் காவல்துறையினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையான என்சிசியின் சிறப்பு முகாம் நடைபெற்றிருக்கிறது.

இந்த முகாமில் அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் அங்கே தங்கி பயிற்சி பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் அந்த முகாமின் பயிற்சியாளர் ஆன நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சிவராமன் 8 வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை அதிகாலையில் தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் படிப்பு போய்விடும் என அந்த மாணவியை சிவராமன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி பள்ளியின் தாளாளர் சாம்சனிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என பள்ளி நிர்வாகம் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.
அதோடு அவருக்கு உடல் நல குறைவும் ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை அழைத்து பேசியபோது தன்னை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததை கூறி இருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிவராமன் தலைமறைவானார் .
மேலும் பள்ளியில் நடத்திய விசாரணையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை அடுத்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான சிவராமன், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவராமமன் விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில் அக்கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து முதல்வர் சதீஷ்குமார், தாளளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதான நிலையில்
தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை கைது செய்ய நான்கு தனி படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிவராமன் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீசார் கைது செய்ய சென்றபோது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போலீசரிடமிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி பாலியல் தொல்லை வழக்கில் சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் அனைவரின் மீதும் போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications