1.5 கிலோ மீட்டர்! பாதி வழியில் இறக்கிவிட்ட கண்டக்டர்! மகனை தூக்கி நடந்த தந்தை! சாட்டை சுழற்றிய அரசு!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது மூளை வளர்ச்சியற்ற மகனுடன் சென்ற தந்தையை பேருந்து நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அவரை தூக்கி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்ற நிலையில் பேருந்தின் ஓட்டுனர் - நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த தக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநரான இவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பேருந்தில் வந்துள்ளார்.
கோபால கிருஷ்ணன் தனது மூளைவளர்ச்சியற்ற தன் 16 வயது மகன் ஹரிபிரசாத் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.
பக்கா ஸ்கெட்ச்.. ஒரே புள்ளியில் இணையும் “4 சம்பவம்”! மாநகரம் பட பாணியில் அமித்ஷாவின் “ஆபரேசன் சவுத்”
கடும் அதிர்ச்சி
பாதி வழியில் சென்ற போது அவரை பேருந்து நடத்துனர் ' இப்பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது கீழே இறங்குங்கள்' எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து மூளைவளர்ச்சியற்ற தன், 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மாற்றுத் திறனாளி மகன்
கோபாலகிருஷ்ணன் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வரும் நிலையில், அவரது மகனுக்கு பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி கிடையாது. மாற்றுத்திறனாளியான அவருக்கு வலிப்பு நோயும் உள்ளது. இந்நிலையில் தனது மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் பட்டா பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பேருந்து (TN29 2720) ஏறியுள்ளனர்.
பாதிவழியில் பரிதவிப்பு
அப்போது நடத்துனரிடம் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் எனக்கூறி ஏறிய நிலையில், அப்பொழுது பேருந்து மாவட்ட ஆட்சியரகம் செல்லும் எனக்கூறி ஏற்றுக் கொண்ட பேருந்து நடத்துனர் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது பாலத்தின் மேலே சென்று விடுவோம் நீங்கள் கீழே இறங்குங்கள்' எனக் கூறி தரக்குறைவாக பேசி இறக்கிவிட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து தனது 16 வயது மாற்றுத்திறனாளி மகனை கையில் சுமந்தபடியே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கோபாலகிருஷ்ணன் நடந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனசாட்சி இல்லாமல் மாற்றுத்திறனாளிகளோடு தந்தையை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.