பாஜகவில் சேர்வதாக வதந்தி.. அவசரமாக வேட்பு மனு.. கிருஷ்ணகிரியில் வெற்றிக்கொடி நாட்டிய கோபிநாத்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் கோபிநாத். ஒசூர் தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை எம்.எல்.ஏவாக இருந்த கோபிநாத், தற்போது எம்.பி ஆகி டெல்லி செல்கிறார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ், பாஜக சார்பில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சாா்பில் வித்யாராணி வீரப்பன், சுயேச்சை வேட்பாளர்கள் 27 போ் போட்டியிட்டனா். முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் மொத்தம் 4,92,883 வாக்குகள் பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜெயபிரகாஷ் 3,00,397 வாக்குகள் பெற்றாா். இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளா் 1,92,486 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், மண்டல குழுத் தலைவருமான வி.ஜெயப்பிரகாஷும் போட்டியிட்டார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகள் பயணித்து, இத்தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.பியாக இருந்தவரும், தற்போது பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் பாஜக சார்பிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 27 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1,92,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன் உள்பட 24 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டை இழந்துள்ளனர்.
ஒசூர் தொகுதியில் 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர் இந்த கோபிநாத். 2016 தேர்தலிலும் போட்டியிட்ட அவர், அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டியிடம் தோல்வி அடைந்தார். பின்னர் பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்ததால் அங்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது கோபிநாத்துக்கு சீட் வழங்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிநாத் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் பரவி காங்கிரஸ் கட்சியினரை அதிர வைத்தன. ஆனால், மூத்த, தீவிர காங்கிரஸ் காரனாகிய நான் மாற்றுக் கட்சியில் சேரப்போகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த முறை கிருஷ்ணகிரி வேட்பாளராக கோபிநாத் அறிவிக்கப்பட்ட பிறகும், சிட்டிங் எம்.பி செல்லக்குமார் அங்கு வாய்ப்பு கேட்டு வந்ததால், காங்கிரஸ், கூட்டணி கட்சியான திமுகவினரை கூட அழைக்காமல் குடும்பத்தினருடன் அவசர அவசரமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைமை மீண்டும் வேட்பாளரை மாற்றிவிடும் என்ற பயத்தில் உடனே சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.
முதல் முறையாக எம்.பியாகி டெல்லி செல்லும் வக்கீல் சுதா.. பாதயாத்திரையில் ராகுல் உடன் பயணித்தவர்!
ஆனால், நான் இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் 4 முறை போட்டியிட்டுள்ளேன். மனுத்தாக்கலின் போது எவ்வித ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியான முறையில் குடும்பத்துடன் வந்து மனுத்தாக்கல் செய்வது எனது வழக்கம், நம்பிக்கை. அதன்படியே கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளேன் எனக் கூறினார்.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு, 1.92 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.பி ஆகி டெல்லி செல்கிறார் கோபிநாத்.












Click it and Unblock the Notifications