"சார் நான் திருடி இல்லை!" கிருஷ்ணகிரியில் நள்ளிரவில் கதவை தட்டிய பெண்! நடந்ததை விவரித்த ஹவுஸ் ஓனர்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே நள்ளிரவில் வீடு வீடாக கதவை தட்டி பெண் ஒருவர் உதவி கேட்ட நிலையில் சிசிடிவி வைக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் நடந்தது என்ன என்பதை விளக்கியுள்ளார்.

பர்கூர், தமிழ்நாடு கிராம வங்கி அருகே எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் அர்ஜுனன். இவர் வசிக்கும் பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தார்.
அவர் சுடிதார் அணிந்திருந்தார். தலை விரிகோலமாக வந்திருந்தார். அங்குள்ள வீடுகளின் கதவுகளை தட்டி, "சார் , சார் காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ, என் பெயர் மீனாட்சி, எனக்கு அடிப்பட்டிருக்கிறது.
நான் திருட வரவில்லை, எனவே பயப்படாமல் கதவை திறந்து எனக்கு உதவி செய்யுங்கள்" என கேட்டார். மேலும் அவரவர் வீட்டு வாசலில் இருந்த பொருட்களில் இருந்து சப்தத்தையும் எழுப்பினார்.
இதெல்லாம் அர்ஜுனன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த பெண் அந்த சிசிடிவி கேமராவை பார்த்து கூட உதவி கேட்டார். பின்னர் யாரும் கதவை திறக்காததால் அவர் அங்கிருந்து சென்றார்.
அப்போது அவர் அங்கு அவ்வழியாக காவி உடை அணிந்து கொண்டு வந்த மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்தார். இதெல்லாம் சிசிடிவியில் வெளியாகியிருந்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில் ,"இது போல் யாராவது உதவி கேட்டு வந்தால் யாரும் கதவை திறக்க வேண்டாம். அவர்கள் உங்களை தாக்கி கொள்ளையடிக்கும் கும்பலாக இருக்கலாம்" என அந்த பகுதி மக்களே வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி கொண்டனர்.
நள்ளிரவில் பீதியை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை கூறுகையில், "தெருவில் உதவி கேட்டு வந்த பெண் மிட்டஹள்ளியை சேர்ந்தவர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரும், அவரது உறவினர்களும் இந்த பெண்ணை தாக்கியதில் உள்காயங்களுடன் பர்கூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது தண்ணீர் தாகத்தால், அந்த வழியாக உள்ள வீடுகளில் தண்ணீர் கேட்பதற்காக வந்து காப்பாற்றுங்கள் என கேட்டுள்ளது தெரியவந்தது. அவர் பர்கூர் அரசு மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே உண்மை தெரியாமல் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும்" என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அந்த சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ள அர்ஜுனன் கூறுகையில், 2 மணிக்கு இருக்கும், அப்போது ஒரு பெண் வந்தார். பரபரனு வந்தாங்க, கேட்டை தட்டினார்கள். நாங்கள் யாரும் கதவை திறக்கவில்லை.
நானும் என் மனைவியும் மட்டும்தான் இருப்பதால் அந்த பெண் குறித்து எங்களுக்கு பயம். அதனால் திறக்கவில்லை. எங்களது மகன்கள் தொலைவில் இருக்கிறார்கள். 10 , 15 நிமிடங்களாக கதவை தட்டினார்.
பிறகு என் மனைவி கதவை திறக்க சென்ற போது நான்தான் வேண்டாம், வேறு யாராவது இருக்க போகிறார்கள் என்றேன். அந்த பெண் போனதும் போய் பார்த்த போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோ அந்த பெண்ணை நிறுத்தி ஏற்றிக் கொண்டு போனது. ஆனால் அந்த பெண்ணுடன் இருந்த ஆண் யாரென தெரியவில்லை. நாங்கள் தனியாக இருப்பதால் என் மகன்தான் சிசிடிவி கேமராவை வைத்தான். அந்த காட்சிகளை என் மகன் எடுத்து அனுப்பி வைத்தான். இதுதான் நடந்தது என அந்த நபர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications