"இம்யூன் எஸ்கேப்".. அச்சுறுத்தும் "டெல்டா +" கொரோனா வைரஸ்.. திடீரென உருவானது எப்படி? புதிய தலைவலி!
லண்டன்: கொரோனா டெல்டா வகை வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது டெல்டா+ வகை கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது.
உலகம் முழுக்க பரவும் பல்வேறு உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா வகை கொரோனா மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளில் டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
இந்த டெல்டா வகை கொரோனாவால் இங்கிலாந்தில் லாக்டவுன் நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டெல்டா + வகை கொரோனா உருவாகி உள்ளது.
மாற்றம்
டெல்டா + வகை கொரோனா டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 ஆக மாறியது ஆகும். B.1.617.2வின் கிளை "AY.1" என்று இது அழைக்கப்படுகின்றது. டெல்டா வகையே உருமாற்றம் அடைந்த கொரோனாதான் என்பதால், அது மேலும் உருமாற்றம் அடைந்த நிலையில் இது டெல்டா + வகையாக மாறியுள்ளது. இந்த டெல்டா + வகை உருமாற்றம் அடைந்ததே மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
எப்படி மாறியது?
பொதுவாக கொரோனா வைரஸ் மனித உறுப்புகளுக்குள் ஸ்பைக் புரோட்டின் மூலம் நுழையும். இந்த ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய வகைகள் உள்ளதால் அதற்கு ஆங்கிலத்தில் என், எஸ், பி, ஆர் என்றெல்லாம் ஆங்கில எழுத்துக்களில் பெயர் வைக்கப்படும். தற்போது B.1.617.2 கொரோனாவில் 417வது வரிசையில் உள்ள "கே" என்ற ஸ்பைக் புரோட்டின் "என்" வகை ஸ்பைக் புரோட்டினாக மாறியுள்ளது. ஸ்பைக் புரோட்டின் இப்படி மாற்றம் அடைவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
எத்தனை நாடுகள்
இப்படி உருமாற்றம் அடைந்த K417N ஸ்பைக் புரோட்டின்தான் டெல்டா + வகை என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இந்த டெல்டா + வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 63 ஜீனோம்களில் இந்த டெல்டா + கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் 36 டெல்டா + கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 6 கேஸ்கள் பதிவாகி உள்ளன. நேபாளம், துருக்கி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்ளும் நபர்களிடம் இந்த டெல்டா + வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எப்படி
இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா ஜீனோம் ஆராய்ச்சிகள் நடப்பது இல்லை. கொரோனாவின் புதிய வகைகள் எப்படி பரவி இருக்கின்றன என்பதை ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஆனால் போதிய ஜீனோம் ஆராய்ச்சி செய்யாத காரணத்தால் டெல்டா + வகை இந்தியாவில் எவ்வளவு பரவி இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது.
ஆண்டிபாடி
இந்த கொரோனா டெல்டா + வகை இம்யூன் எஸ்கேப் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். இதன் ஸ்பைக் புரோட்டின் மாற்றம் அடைந்துள்ளதால் சில வகையான கொரோனா சிகிச்சைக்கும், காக்டெயில் கொரோனா சிகிச்சையும் பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் இதன் காரணமாக இது வேகமாக பரவும் என்று சொல்ல முடியாது. இதன் பரவல் வேகம் போக போகத்தான் தெரியும் .
முக்கியம்
இந்த டெல்டா + வகை கொரோனா வேக்சின் போட்டவர்களை பாதிக்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. வேக்சின் போட்டவர்களின் பிளாஸ்மாவை சோதனை செய்து அதன் மூலம் மட்டுமே இந்த டெல்டா + வகை வேக்சின் போட்டவர்களை தாக்குமா, அவர்களும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படும்.