கொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவு
லண்டன்: உலகின் முன்னணி விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியால் 9,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
கொரோனா லாக்டவுனால் உலக நாடுகளிடையே விமான போக்குவரத்து 3 மாதங்களுக்கும் மேலாக முடங்கி இருக்கிறது. தற்போது சிறப்பு விமானங்கள் மூலம் தங்களது நாட்டவரை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீட்டு வருகின்றன.

உலக நாடுகளில் பொது விமானப் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் உலகின் முன்னணி விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
போயிங் 787, ஏர்பஸ் 350 விமானங்களுக்கான எஞ்சின்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே தயாரித்தும் வருகிறது. தற்போது சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனம் உள்ளது.

இதனையடுத்து தமது 52,000 பணியாளர்களில் 9,000 பேரை நீக்குவது என அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ11,000 கோடி சேமிக்க முடியும் என்பது அந்த நிருவனத்தின் கணக்கீடு.












Click it and Unblock the Notifications