ஐரோப்பாவில் தொடங்கியது அடுத்த அலை? காரணம் டெல்டா கொரோனா.. உலக சுகாதார மையம் புதிய எச்சரிக்கை
லண்டன்: சில மாதங்களாக ஐரோப்பாவில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த வாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒழுக்கமாக இருக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் ஒரு புதிய அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகில் எந்த நாடும் இதுவரை கொரோனாவை முழுமையாக ஒழிக்கவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிரமான கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக மக்கள் பின்பற்றவில்லை என்றால் என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துத் தான் வருகிறோம்.

ஐரோப்பிய நாடுகள்
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, ஜெர்மனி தொடங்கி ஸ்பெயின், டென்மார்க், பிரிட்டன் என அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது. அதன் பின்னர் அமல்படுத்தப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்கவில்லை. இடையில் ஆல்பா உருமாறிய கொரோனா பாதிப்பு காரணமாக வைரஸ் பாதிப்பு சற்றே அதிகரித்தது. இருப்பினும், கையை மீறிச் செல்லவில்லை.

மீண்டும் அதிகரிப்பு
இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மட்டும் வைரஸ் பாதிப்பு 10% வரை அதிகரித்துள்ளது. போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளும் கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றாமல் இருப்பதும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்
மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒழுக்கமாக இருக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் ஒரு புதிய அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார், டெல்டா கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், வரும் காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி
மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால், அது கொரோனா அடுத்த அலையை ஒட்டுமொத்தமாகத் தடுக்காது என்றும் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்தார். டெல்டா கொரோனா வைரஸ் தற்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைகிறது என்றாலும்கூட அது உயிரிழப்பைத் தடுக்கிறது. எனவே குறைந்தது 80% மக்களுக்கு மிக விரைவாக இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications