இஸ்ரேல் மீது ஐரோப்பிய நாடுகள் கோபம்.. ஆயுத விற்பனையை நிறுத்த, அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை
லண்டன்: இஸ்ரேல் அரசின் காஸா மற்றும் தெற்கு லெபனான் மீதான யுத்த நடவடிக்கைகளைத் தடுக்க ஐரோப்பிய தலைவர்கள் கடும் அழுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மட்டுமின்றி, இஸ்ரேல் வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு தடைகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன. இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவை மாற்றியமைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகமான சிஎன்என் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. அமைதிப் படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் ஐரோப்பா தனது அழுத்தத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம். இஸ்ரேல் தாக்கிய பகுதியில், ஐயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் படைகள் இருந்தனவாம். இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை மறுக்கவில்லை என்றாலும், ஹிஸ்புல்லா அமைப்பை குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் ஜோசப் போரெல், "உயிரிழப்புகள் அதிகமாகின்றன," என்று கவலை தெரிவித்தார். காஸா பகுதியில் 42,000 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள சுகாதாரத்துறை தெரிவித்தது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன், "இஸ்ரேல் ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் உருவானது என்பதை நெதன்யாகு மறக்கக் கூடாது," என்று சுட்டிக்காட்டி பேசி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த நெதன்யாகு, "எங்கள் விடுதலைப் போராட்டத்தில் வென்றதுதான் இஸ்ரேலின் உருவாக்கம்" என்று பதிலடி தெரிவித்திருந்தார்.
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மேலோனி, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்திருந்தார். "இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்தான், ஆனால் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
பிரிட்டன், இஸ்ரேலின் வலதுசாரி ஆதரவு அமைச்சர்கள் மீது தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்கிறது. மாறாக, ஜெர்மனி, தனது "அரசியல் அடிப்படையில்" இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடரும் என்று அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இஸ்ரேலின் வர்த்தகம் 2022ல் $50.7 பில்லியன் அளவில் இருந்தது. ஆயுத ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்தால் அது இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிருப்தி உள்ளது. ஆனால் முழுமையாக உறவையும் அவர்கள் துண்டிக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. இவ்வாறு சிஎன்என் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications