வணிகம் முதல் இலக்கியம் வரை.. பியூஷ் கோயல், ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்கும் லண்டன் IGF நிகழ்ச்சி
லண்டன்: இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) அமைப்பின் முக்கியமான நிகழ்வான IGF லண்டன் 2025 மாநாடு, இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வர்த்தக துறை செயலாளர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையுடன் தொடங்குகிறது. இங்கிலாந்து-இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும்!
இன்று ஜூன் 18 முதல் 20 வரை நடைபெறும் IGF லண்டன் மாநாட்டில், பியூஷ் கோயல் மற்றும் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்தும், இந்தியா இங்கிலாந்து இடையேயான உறவு எப்படி உலக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக இருக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து உறவு
இது குறித்து இந்தியா குளோபல் ஃபோரத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மனோஜ் லட்வா கூறுகையில், "இங்கிலாந்து-இந்தியா உறவு ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். ஆனால் இந்த உறவின் உண்மையான வலிமை என்பது இதைச் செயல்படுத்தும் நபர்கள், அவர்களின் எண்ணங்களிடம் தான் உள்ளது. வணிகம், கலாச்சாரம், கண்டுபிடிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றில் பொதுவான இலக்குகளை அடைய நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.
இந்தியாவின் வளர்ச்சி
இங்கிலாந்து- இந்தியா பொருளாதார உறவில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இந்த ஆண்டு மாநாடு இருக்கும். இதில், கிராண்ட் தோர்ன்டன் (Grant Thornton) நிறுவனத்தின் 'இந்தியா மீட்ஸ் பிரிட்டன் டிராக்கர்' அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கை, இங்கிலாந்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய நிறுவனங்கள் பற்றியும், முதலீடுகள், பொருளாதார தாக்கம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிந்தைய எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் தகவல்களை வழங்குகிறது.
இலக்கியத்துறையில், QEII மையத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில் IGF அர்ச்சார் அமிஷ் விருது வழங்கப்படும். ஜெஃப்ரி அர்ச்சார் மற்றும் அமிஷ் திரிபாதி ஆகியோருடன் முன்னெடுப்பில் இருந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் நவீனத்துவத்தையும், பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் சமகால இந்தியப் புனைகதைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பத்தின் பங்கு
இதில் இரண்டாம் நாள் நிகழ்வில், இங்கிலாந்தின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான இணை அமைச்சர் லார்ட் பேட்ரிக் வாலன்ஸ் முக்கிய உரை நிகழ்த்துகிறார். இந்திய மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சிகளுடன் இணைந்து, தொற்றுநோய் தடுப்பு, குவாண்டம் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த துறைகளில் இங்கிலாந்தின் ஆராய்ச்சி திறனும், இந்தியாவின் புதுமையான அணுகுமுறையும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆராயப்படும்.
கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல்
இதில் மூன்றாம் நாள் நிகழ்வில், கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் கலாச்சார பரிமாற்றம் எப்படி புதுமை, அடையாளத்தை உருவாக்குகிறது என்பது குறித்து விவாதிக்கப்படும். இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள கலைஞர்கள், கதைசொல்லிகள் மற்றும் கலாச்சார ஆய்வாளர்கள் எப்படி அதிகாரம், பார்டனர்ஷிப் உள்ளிட்டவற்றை மறுவரையறை செய்கிறார்கள் என்பதை இந்த கருத்தரங்கு எடுத்துக்காட்டும்.
ஆன்மீகத் தலைவர் கௌரங்க தாஸ் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்வும் இதில் நடைபெறுகிறது. அதில் தொழில்நுட்பம் நிறைந்த உலகில், இந்தியத் தத்துவங்கள் நவீன தலைமைத்துவம், உற்பத்தித்திறனை எப்படி வடிவமைக்கின்றன என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இசை நிகழ்ச்சி
இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் இந்த மாநாடு நிறைவடைகிறது. மேலும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசை மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) பற்றி: இந்தியா குளோபல் ஃபோரம், சமகால இந்தியாவின் கதையைச் சொல்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் வேகம் உலகிற்கு ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வணிகங்களுக்கும் நாடுகளுக்கும் IGF ஒரு நுழைவாயிலாகச் செயல்படுகிறது.












Click it and Unblock the Notifications