லண்டன் நதியில் மிதந்து வந்த இந்திய மாணவரின் உடல்.. பிரிட்டனில் இந்தியருக்கு என்ன நடந்தது! பரபரப்பு
லண்டன்: கடந்த மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் மாயமான இந்திய மாணவர் சடலமாக தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். வெளிநாடுகளில் பட்டம் பெற்றால் எப்படியாவது செட்டில் ஆகிவிடலாம் என்பதற்காக அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்வதில்லை,
இந்திய மாணவர் மாயம்: ஆனால், சில சமயங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது பிரிட்டனில் நடந்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவரின் உடல் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மித்குமார் படேல் என்ற அந்த இளைஞர் கடந்த நவம்பர் 17ஆம் தேதி காணாமல் போனார். அவருக்கு வயது 23..
இவர் கடந்த செப். மாதம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி இவர் மாயமான நிலையில், போலீசார் அவரை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ஃப் பகுதிக்கு அருகே தேம்ஸ் நதியில் அவரது உடலை லண்டனை போலீசார் மீட்டுள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
போலீசார் தகவல்: அதேநேரம் இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று லண்டன் போலீஸ் தெரிவித்துள்ளது. எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக மித்குமார் படேலை தேடும் பணிகளுக்காக அவரது உறவினர் பார்த் படேல் என்பவர் ஆன்லைன் மூலம் நிதி திரட்டலில் ஈடுபட்டார். இது குறித்து பாரத் படேல் கூறுகையில், "மித்குமார் படேல் 23 வயது இளைஞன். கடந்த செப். மாதம் தான் மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்தான்.. அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தில் இருந்து வந்தவர்.
உறவினர் தகவல்: இந்தச் சூழலில் தான் கடந்த நவ. 17ஆம் தேதி அவர் மாயமானார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி அன்று கேனரி வார்ப் என்ற பகுதியில் அவரது சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதை எங்களால் நம்பவே முடியவில்லை. இப்போது அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு தொடர்ந்து நிதி திரட்டி வருகிறேன்" என்றார்.
மித்குமார் படேல் லண்டனில் இருந்து கிளம்ப இருந்தார். அவருக்கு ஷெஃபீல்ட் என்ற பகுதியில் உள்ள ஹலாம் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருந்தது. மேலும், அவர் அமேசானில் பகுதி நேர வேலையிலும் சேர இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் மாயமானார்.
என்ன நடந்தது: உறவினர்களுடன் தங்கி இருந்த அவர், அன்றைய தினம் வாக்கிங் சென்றுள்ளார். இருப்பினும், அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். லண்டனில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications