இங்கிலாந்தில் பரிசோதனையில் அதிர்ச்சி.. 3ல் ஒரு பங்கு சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்ட அந்நாட்டு சுகாதாரத் துறை பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதியாகி உள்ளதாக அந்நாட்டு அரசின் புதிய புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 778 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 12107 பேர் இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 5252 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக அங்கு 93873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்து இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சுகாதார பணியாளர்கள்
இங்கிலாந்து அரசால் திங்களன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள்" என்ற பிரிவில் அறிகுறி உள்ள்வர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுடன் வசிப்பர்கள் என 16888 பேருக்கு நடத்தப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில் 5733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு (34 சதவீதம்) சுகாதாரத்துறை பணியாளர்களுககு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக இங்கிலாந்து அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒரு பகுதியினர் நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளனர், புதிய பிரிட்டிஷ் அரசாங்க தரவு காட்டுகிறது.

இது இறுதியானதல்ல
எனினும் அறிகுறிகள் இல்லாத மற்றும் பரிசோதனை செய்வதற்கான இங்கிலாந்தின் அளவுகோல்கள்படி யாருடனும் வாழாத சுகாதார ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்படவில்லை. எனவே மேற்கண்ட 34 சதவீதம் என்பது இறுதியான விவரமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

சோதனை விரிவு
இதனிடையே சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான சோதனைகளை விரைவுபடுத்துவதற்கும், சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தி வழங்குவதிலும் (பிபிஇ) இங்கிலாந்து அரசு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. அறிகுறி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று இல்லாமல் அனைத்து சுகாதாரப்பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதே தங்கள் இறுதி இலக்கு என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் முன்பு கூறியிருந்தார்.

14 ஆயிரம் பரிசோதனை
ஆனால் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை அளவு பல ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைவாகவே உள்ளது. இந்த குறைவான சோதனைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஏப்ரல் 2 ம் தேதி பதிலளித்த சுகாதார செயலாளர் ஹான்காக், மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 10,000த்தில் இருந்து 100,000 சோதனைகள் வரை அதிகரிப்பதாக கூறினார். ஆனால் ஏப்ரல் 12 ம் தேதி நிலவரப்படி 14,506 கொரோனா வைரஸ் சோதனைகள் மட்டுமே நடந்ததாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள் சொல்கின்றன. இதன் மூலம் இங்கிலாந்து சோதனையை கடுமையாக அதிகரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.












Click it and Unblock the Notifications