பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து.. ஓபனாக பேசிய பிரிட்டன் பிரதமர்! இஸ்ரேலுக்கு நெருக்கடி
லண்டன்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காத 53 நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. ஆனால் இஸ்ரேல் போர் காரணமாக பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சம் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. இந்நிலையில் இந்த போரை நிறுத்தி உணவு பஞ்சத்தை சரி செய்யவில்லை எனில் பாலஸ்தீனத்தை நாங்கள் தனி நாடாக ஏற்போம் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். இதனால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 எம்பிக்கள் இருக்கின்றனர். இவர்களில் 250 எம்பிக்கள், அதாவது மொத்த எம்பிக்களில் மூன்றில் ஒரு பகுதி எம்பிக்கள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு பேசியிருக்கிறார்.

உலகம் முழுதும் காசாவின் நிலைமை கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா ஆதரவு நாடுகள் கூட வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது பிரிட்டன் போர் நிறுத்தம் குறித்தும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்தும் பேசியிருக்கிறது.
சமீபத்தில் கோடைகால அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்த பிரட்டன் பிரதமர், இது குறித்து அதில் விவாதித்து இருந்தார். மட்டுமல்லாது ஸ்காட்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த அவர், இந்த விவகாரம் குறித்து விவாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக அங்கு செயற்கையான பஞ்சம் உருவாக்கப்பட்டு இருக்கிறது உணவுக்காக மக்கள் தவித்து வருகிறார்கள்.
தொண்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் உணவுகளை பெற வரிசையில் இருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்திருக்கிறது. மறுபுறம் போர் காரணமாக உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60,000ஐ கடந்து இருக்கிறது. உணவு இல்லாமல் காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்திருப்பதால் தற்போது உலக நாடுகள் போருக்கு எதிரான குரலை எழுப்பி வருகின்றன.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பிரிட்டன் பேசி இருந்ததை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இந்த முடிவு ஹமாசுக்கு ஆதரவானது என்று இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
காசாவுக்கு உணவுகளை லாரி மூலம் உலக நாடுகள் அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால் இஸ்ரேலை கடந்துதான் அந்த லாரியில் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் இஸ்ரேலில் இப்போது வரை லாரிகளை உள்ளே அனுப்பாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே உணவுப் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications