"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.." மீண்டும் பிரதமர் ரேசில் ரிஷி! ஆதரவை கண்டு மிரளும் போட்டியாளர்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வெல்லவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
பிரிட்டன் பிரமதராக இருந்த போரிஸ் ஜான்சன் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி அவர் ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவியது. இருப்பினும் அதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

லிஸ் டிரஸ்
இருப்பினும், அவர் பிரதமர் ஆன பின்னர் பிரிட்டன் நிலை மேம்படவில்லை. குறிப்பாக அவரது வரி குறிப்பை நடவடிக்கை நெகடிவ்வான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். இரு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். கட்சிக்குள் அவருக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பிரிட்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.

அடுத்து யார்
அங்குள்ள சட்டப்படி ஆளுங்கட்சி தலைவரே அந்நாட்டின் பிரதமராகச் செயல்படுவார். இதையடுத்து மீண்டும் பிரதமரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. பல்வேறு கருத்துகளைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்றால் அதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். ஏற்கனவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான பென்னி மோர்டான்ட் தனது பிரதமர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.

போட்டி
அதேபோல முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சனும் கூட மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் நலனுக்கு ரிஷி சுனக்கை அவர் விட்டுக் கொடுக்கச் சொன்னதாகவும் கூட தகவல் வெளியாகி இருந்தது. ரிஷி சுனக் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட போதிலும். இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக அதை அறிவிக்காமலேயே இருந்தார்.

அறிவிப்பு
இந்தச் சூழலில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு உள்ளது. பிரிட்டன் பிரதமராகப் போட்டியிட ஒருவருக்குக் குறைந்தது 100 எம்பிக்கள் தேவை. தற்போதைய சூழலில் ரிஷி சுனக்கிற்கு மட்டுமே இந்தளவுக்கு எம்பிக்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நமது பொருளாதாரத்தைச் சரி செய்யவும், கட்சியை ஒன்றிணைக்கவும், நாட்டிற்குத் தேவையானவற்றை வழங்கவும் நான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். நம் கட்சி இப்போது எடுக்கும் முடிவு தான் அடுத்த தலைமுறை பிரிட்டிஷ் மக்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்கப் போகிறது. பிரிட்டன் மக்களுக்குக் கடந்த காலத்தை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கும்" என்று பதிவிட்டு உள்ளார்.

நடைமுறை என்ன
நாளை திங்கள்கிழமை உடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது. வேறு எந்தவொரு நபருக்கும் 100 எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் ரிஷி சுனக் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு இருந்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதமர் தேர்வு செய்யப்படுவார். இந்த அனைத்து செயல்முறையும் அக்.. 28க்குள் நிறைவடையும்.

எம்பிக்கள் ஆதரவு
தற்போதைய சூழலில் ரிஷி சுனக்கிற்கு தான் அதிக எம்பிக்களின் ஆதரவு உள்ளது. எனவே, அவர் பிரதமராகவே வாய்ப்புகள் அதிகம். போரிஸ் ஜான்சன் இதுவரை போட்டியிட உள்ளது குறித்து வெளிப்படையாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் அறிவிக்கும்பட்சத்தில் நிலைமை மாற வாய்ப்பு உள்ளது. பிரிட்டனில் அடுத்து 2024இல் தான் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications