இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை
லண்டன்: இலங்கையில் 1980களில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இலங்கையில் 1980களின் தொடக்கத்தில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு இங்கிலாந்தின் Keenie Meenie Services - KMS என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் பயிற்சி அளித்தது. இங்கிலாந்து கூலிப்படையினரிடம் பயிற்சி பெற்ற இலங்கை அதிரடிப்படையினர் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான புகார்கள் இங்கிலாந்தில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கடந்த சில மாதங்களாக இலங்கையில் தமிழருக்கான எதிரான போர்க்குற்றங்களில் இங்கிலாந்து கூலிப்படையினர் பங்களிப்பு தொடர்பான செய்திகள், நூல்கள், ஆவணங்கள் வெளியாகின.
இதனையடுத்து தற்போது லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். சர்ச்சைக்குரிய Keenie Meenie Services நிறுவனம் தற்போது செயல்படவில்லை. இதன் நிறுவனரான டேவிட் வாக்கர், மற்றொரு பாதுகாப்பு நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.