"மக்கள் நம்பிக்கையை தகர்த்துவிட்டார்.." ஒரே ஒரு பேனா.. வசமாக மாட்டிய ரிஷி சுனக்! அடுத்து என்ன
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் இப்போது தான் பயன்படுத்தும் ஒரு வகை பேனாவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது நாட்டு மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பிரிட்டன் நாட்டில் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக இருக்கிறார். ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்கும் சமயத்தில் அந்நாட்டு மிகவும் மோசமான பொருளாதார சூழலில் இருந்தது.
அந்த நேரத்தில் பிரதமர் பதவிக்கு வந்த ரிஷி சுனக், நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரம் மறுபுறம் அவர் செய்யும் காரியங்கள் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.

ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மனைவியின் வருமான வரி, சீட் பெல்ட் அணியாமல் சென்றது, நாய் கட்டுப்படுத்த தவறியது எனப் பல சர்ச்சைகளில் ரிஷி சுனக் சிக்கி வருகிறார். இதற்கிடையே இப்போது அவர் மற்றொரு விஷயத்தில் வம்பில் மாட்டியுள்ளார். ஏற்கனவே ரிஷி சுனக் இமேஜ் டேமேஜ் ஆகி வரும் நிலையில், இது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைகிறது.
பொதுவாக எந்தவொரு தலைவரும் அரசு ஆவணங்களில் தனது தனிப்பட்ட குறிப்புகளைக் கைப்பட எழுதுவார்கள். அப்படி எழுதப் போய் தான் ரிஷி சுனக் இப்போது வம்பில் மாட்டியுள்ளார். அதாவது ரிஷி சுனக் அழியக்கூடிய மையைப் பயன்படுத்தி அரசு ஆவணங்களில் எழுதியதே இப்போது சர்ச்சையாகியுள்ளது. அரசு சார்ந்த ஆவணங்களை ரிஷி சுனக் அலட்சியமாகக் கையாள்வதை இது காட்டுவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏன் பிரச்சினை: இதற்கு முன்பு அவர் எம்பியாக இருந்த போதும் அவர் இதே பேனாவை தான் பயன்படுத்தியிருந்தார். இது ஏன் இப்படி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது எனக் கேட்கிறீர்களா.. அதாவது இது அழிக்கக் கூடிய மையம் என்பதால் பிரதமர் எழுதித் தரும் குறிப்பை யார் வேண்டுமானாலும் அழித்துவிடலாம் என்ற சூழலே இருப்பதால் இது பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
ரிஷி சுனக் இப்போது பயன்படுத்தும் இந்த அழிக்கக் கூடிய மையை கொண்ட பேனா அங்கே 4.75 பவுண்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக எழுதப் பழகும் நபர்களே இந்த அழிக்கக்கூடிய மை கொண்ட பேனாக்களைப் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் தவறு செய்தால், அழிப்பானை வைத்து அதை அழித்துவிடலாம். பிரதமர் ரிஷி சுனக் தனது அனைத்து குறிப்புகளை இந்த பேனாவை வைத்தே குறித்து வைத்துள்ளாராம்.

விளக்கம்: இது அங்கே சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பொது வாழ்வில் இருக்கும் பலரும் இந்த வகை பேனாவை பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தக் கூடாது என்று எந்தவொரு விதியும் இல்லை. பிரதமர் ரிஷி சுனக் அதில் இருக்கும் அழிக்கும் ஆப்ஷனை ஒருபோதும் பயன்படுத்தவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டம், அதிகாரப்பூர்வ கடிதங்களில் கையெழுத்திடுவது, என முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும் கூட இந்த பேனாவைப் பயன்படுத்தியுள்ளார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதையடுத்து பலரும் ரிஷி சுனக்கிற்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
நாட்டின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோல அழியக் கூடிய மையை பயன்படுத்தி கையெழுத்துப் போட்டால் அது பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்துவிடும் என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் பலரும் இப்போது ரிஷி சுனக்கை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications