பெற்றோர் அருகே நல்லடக்கம் செய்யப்படும் ராணி எலிசபெத் உடல்.. அப்போ இளவரசர் பிலிப் உடல் என்னவாகும்
லண்டன்: இரண்டாம் ராணி எலிசபெத் உடல் லண்டன் எடுத்து வரும் நிலையில், அவரது உடல் எங்குப் புதைக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பிரச்சினைகளால் இரண்டாம் ராணி எலிசபெத் அவதிப்பட்டு வந்தார். நிற்கவும் நடக்கவும் அவர் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வந்தார்.
இந்தச் சூழலில் தான் அவர் இந்திய நேரப்படி வியாழக்கிழமை உயிரிழந்தார். 96 வயதான இரண்டாம் ராணி எலிசபெத், பிரிட்டன் நாட்டில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவர்.
FACT CHECK: இந்தியாவில் ஒருவர் இருக்கிறார்? சீமான் பற்றி அறிக்கை வெளியிட்டாரா எலிசபெத்? உண்மை என்ன?
அஞ்சலி
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள அரண்மனையில் இரண்டாம் ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், அவரது உடலை லண்டன் எடுத்து வரும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. அவரது உடல் சுமார் 5 நாட்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. முதலில் பிரிட்டன் அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில், அதன் பின்னர் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
நல்லடக்கம் எங்கே
ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்ற கோட் நேமில் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அவரது உடல் எங்குப் புதைக்கப்படும் என்பது குறித்த தகவல்களும் இப்போது வெளியாகி உள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் விண்ட்சர் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அவரது மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பின் உடலும் எலிசபெத் உடல் அருகே கிங் ஜார்ஜ் VI மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது.
பெற்றோர் அருகே
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத்தின் அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடைபெறும் நிலையில், அதன் பின்னர் எலிசபெத் உடல் கிங் ஜார்ஜ் VI மெமோரியலில் எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது பெற்றோர், 1952இல் மறைந்த கிங் ஜார்ஜ் VI, மற்றும் முதலாம் ராணி எலிசபெத் (ராணியின் தாய்) 2002இல் மறைந்தார். அதே போல் 2002இல் மறைந்த அவரது சகோதரி, இளவரசி மார்கரெட் ஆகியோரின் உடல்களும் இதே கிங் ஜார்ஜ் VI நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் பிலிப் உடல்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இளவரசர் பிலிப் மறைந்தார். கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே தான் இறுதிச் சடங்கும் நடந்தது. இளவரசர் பிலிப் உடல் இன்னும் கூட இறுதிச் சடங்கு நடந்த செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இருக்கும் ராயல் வால்ட்டில் தான் உள்ளது. இப்போது ராணி எலிசபெத்தும் மறைந்துள்ள நிலையில் கிங் ஜார்ஜ் VI மெமோரியலுக்கு அரசர் பிலிப்பின் உடலும் எடுத்து வரப்பட உள்ளது.
அறிக்கை
ராணி எலிசபெத் மரணம் தொடர்பாக புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அன்புக்குரிய தாயான ராணியின் மரணம், எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகப்பெரிய சோகமான தருணம் ஆகும். ஒரு நேசத்துக்குரிய மற்றும் மிகவும் அன்பான தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். அவரது இழப்பு நாடு முழுவதும், மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்பதை நான் அறிவேன்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.