கருப்பு பக்கங்கள்! அடிமைகளின் ரத்தத்தில் எழுந்த கோட்டை! எலிசபெத்தின் மரணத்தை சிலர் கொண்டாடுவது ஏன்?
லண்டன்: இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II மரணத்திற்கு பலர் துக்கம் அனுசரித்து வரும் நிலையில், இவரின் மரணத்தை உலகில் சிலர் கொண்டாடியும் வருகின்றனர்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II நேற்று இரவு காலமானார். ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக பக்கிம்ஹாம் பேலஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ராணி எலிசபெத் உடல்நிலை நேற்று மோசமானது.
இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.
இவர் 70 வருடமாக அங்கு ராணி பதவியில் இருந்தார். அங்கு நீண்ட காலம் ராணி பதவியில் இருந்தவர் எலிசபெத் IIதான். இவருக்கு 96 வயது ஆகிறது.

இங்கிலாந்து
இங்கிலாந்திலும், காமன்வெல்த்தில் இங்கிலாந்து ராஜ குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 14 நாடுகளும் இந்த மரணம் காரணமாக துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கின்றன, இங்கிலாந்து மக்களை இந்த மரணம் மிகப்பெரிய துக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால் அதே சமயம் உலகில் இன்னொரு பிரிவின் இவரின் மரணத்தை கொண்டாடி வருகின்றனர். இவரின் மரணத்திற்கு நாங்கள் துக்கம் அனுசரிக்க மாட்டோம். உலகம் முழுக்க பல லட்சம் மக்களை அடிமைப்படுத்திய, பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்த இவருக்காக கண்ணீர் விட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

பிரிட்டிஷ்
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக இப்போதும் இருப்பவர்தான் எலிசபெத். பிரிட்டனிலும் சரி.. உலகம் முழுக்கவும் சரி நிறவெறி இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கான விதையை போட்டவர் எலிசபெத் மற்றும் அவர்களின் காலனி ஆதிக்க ஆட்சிதான். உலகம் முழுக்க அடிமைகளை ஏற்றுமதி இறக்குமதி செய்தது, கறுப்பின மக்களை கொடுமைப்படுத்தியது, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் கொள்ளை அடித்தது, இந்தியாவை அடிமையாக வைத்து இருந்தது, இலங்கையில் கங்காணிகள் கட்டுப்பாட்டில் தமிழர்களை தேயிலை அடிமைப்படுத்தியது என்று ராணி எலிசபெத் ஆட்சிக்கு பல கருப்பு பக்கங்கள் இருக்கின்றன.

காலனி ஆதிக்க ஆட்சி
அவர்களின் காலனி ஆதிக்க ஆட்சி மூலம், இங்கிலாந்து குவித்த சொத்துக்கள் ஏராளம். நல்ல பொருளாதாரத்தோடு இருந்த ஆசிய நாடுகளை சூறையாடி, அவர்கள் பெற்ற செல்வத்தில் இப்போது ராஜா - ராணி குடும்பம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. இப்போதும் கூட காமன்வெல்த் பயணங்கள் மூலம் இங்கிலாந்து மன்னர் குடும்பம் தங்களின் காலனி ஆதிக்க நினைவுகளை அசைபோட்டுக்கொண்டுதான் இருக்கிறது. உலகில் கிட்டதட்ட 22 நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகளை பிரிட்டிஷ் அரசுதான் அடிமையாக்கி வைத்து இருந்தது.

பல லட்சம் பேர்
இந்த காலத்தில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் அடிமையாக நாடு கடத்தப்பட்டு, ஆப்ரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் பஞ்சத்தில் தள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் நாட்டின் கடைசி ராணியாக இருந்தவரும் எலிசபெத் IIதான். இதை முன்னிட்டே அவரின் மரணத்திற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரின் மரணத்தை நாங்கள் கொண்டாடுவோம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சி
பிரிட்டிஷ் ஆட்சியின் கருப்பு பக்கத்தின் வெள்ளை அடையாளம்தான் ராணி எலிசபெத். முக்கியமாக கறுப்பின மக்களுக்கும், ஆசிய மக்களுக்கு எதிராக மிக கடுமையான அடக்குமுறைகளை கையாண்ட குழுவின் ராணி அவர். இப்போதும் கூட இந்த ராஜா - ராணி முறையை கைவிட அவர்களின் ராஜா குடும்பம் மறுப்பதும்.. 14 நாடுகளை இப்போது தங்கள் காமன்வெல்த்தில் வைத்து இருப்பதும் கூட திமிர்தத்தின் வெளிப்பாடுதான் என்று பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications