"யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய.. நோயாளிகளின் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்.."உபி.யில் செம ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்திலுள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றில், யாருக்கெல்லாம் கண்டிப்பாக ஆக்சிஜனை தேவை என்பதைக் கண்டறிய சுமார் 5 நிமிடங்கள் மருத்துவமனை நிர்வாகமே ஆக்சிஜன் சப்ளேவை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியிருந்தது.
அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது. அந்த காலகட்டத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தது.

மோசமான நிலை
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கைகள் என அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. ஒருபுறம் கொரோனாவால் பொதுமக்கள் உயிரிழந்தனர். மறுபுறம், தேவையான நேரத்தில் ஆக்சிஜன், படுக்கைகள் கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

ஆக்சிஜன் சப்ளே
தற்போது தான் நிலைமை மெல்ல மாறி வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள புழக்பெற்ற பராஸ் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம், எந்த நோயாளிகளுக்கு எல்லாம் கண்டிப்பாக ஆக்சிஜனை தேவை என்பதைக் கண்டறிய, சுமார் 5 நிமிடங்கள் மருத்துவமனை நிர்வாகமே ஆக்சிஜன் சப்ளேவை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ
தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள அந்த வீடியோவில் பராஸ் மருத்துவமனையின் உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின், "அப்போது எங்கள் மருத்துவமனையில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. நோயாளிகளை அழைத்துச் செல்லும்படி உறவினர்களிடம் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் யாரும் தயாராக இல்லை. எனவே நான் ஒரு பரிசோதனையை நடத்த முடிவு செய்தேன். இதை mock drill என்று கூறலாம்

22 பேருக்கு மூச்சுத்திணறல்
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி காலை 7 மணிக்கு ஐந்து நிமிடங்கள் ஆக்ஸிஜன் சப்ளேவை நிறுத்தினோம். இதனால் 22 நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது. அவர்களின் உடல்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின. ஆகவே, அவர்களால் ஆக்சிஜன் இல்லாமல் வாழ முடியாது என்பதைக் கண்டறிந்தோம். பின்னர் ஐ.சி.யுவில் மற்ற 74 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை அவர்களைத் தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டோம்" என்று அசால்ட்டாக கூறுகிறார்.

மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
இவரது வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய செயலை பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், தான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக அரிஞ்சய் ஜெயின் விளக்கமளித்துள்ளார். யாருக்கு ஆக்சிஜன் தேவை எனக் கண்டறிந்து, அவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கவே ஒரு பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே ஏப்ரல் 26-27 நாட்களில் பராஸ் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியானது.

விசாரணைக்கு உத்தரவு
ஆனால், இதை மறுத்துள்ள அரிஞ்சய் ஜெயின் ஏப்ரல் 26ஆம் தேதி 4 பேரும் ஏப்ரல் 27ஆம் தேதி மூன்று பேரும் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனை இது தான் உயிரிழப்பிற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றார். இது குறித்து உத்தரப் பிரதேச சுகாதாரத் துறையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications