கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகிகள்.. தொக்காக சிக்கியும் 2 மாதங்களுக்கு பிறகே கைது!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்கலைக்கழக மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது நண்பருடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகில் வரும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து மாணவனை கடுமையாக தாக்கி விட்டு துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

இளம்பெண் கூச்சலிட்டதால் அவரது வாயைத் துணியால் கட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அவரது ஆடைகளைக் களைந்து, வீடியோ எடுத்து மிரட்டியதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து அந்த மாணவி தனது பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று தோழிகளிடம் கூறினார்.இதையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது.
போலீசார்அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது பிரிஜ் என்கிளேவ் காலனி சுந்தர்பூரைச் சேர்ந்த குணால் பாண்டே, ஜிவாதிபூர் பஜார்திஹாவைச் சேர்ந்த அபிஷேக் சவுகான் என்ற ஆனந்த் மற்றும் பஜார்திஹாவைச் சேர்ந்த சக்ஷாம் படேல் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால் அவர்களை கைது செய்யாமல் போலீஸார் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பனாரஸ் இந்து பல்கலைகழக மாணவர்கள், பாலியல் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் நடத்தியும், குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குணால் பாண்டே, அபிஷேக் சவுகான், சஷாம் படேல் ஆகிய மூவரும் வாரணாசி பாஜக ஐடி விங் நிர்வாகிகளாகச் செயல்பட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கட்சியை விட்டு நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கட்சி பாஜக என காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications