சைபர் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. உ.பி முதல்வர் யோகி எடுத்த மேஜர் முடிவு
லக்னோ: சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் சைபைர் கிரைம் போலீஸ் நிலையங்களை அமைக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சைபர் குற்றங்களை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். அதாவது, மாநிலம் முழுவதும் சைபர் போலீஸ் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதே இந்த உத்தரவு. யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி அடுத்த 2 மாதங்களில் 57 புதிய சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், சைபர் கிரைம் குற்றங்களை திறம்பட கட்டுப்படுத்த அனைத்து மட்டத்திலும் காவல்துறையை வலுவாக்கப்பட வேண்டும் என்று யோகி ஆதிதயநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது பிராந்திய அளவில் மட்டுமே செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையங்களை மொத்தம் உள்ள 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின் பேரில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளது. அது மட்டும் இன்றி சைபர் பிரிவு அனைத்து காவல் நிலையங்களிலும் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே அதிக அளவு மோசடிகள் நடப்பதால் சாமானிய மக்கள் பணத்தை பறிகொடுத்து ஏமாந்து போகின்றனர்.
எனவே, மக்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து மட்டத்திலும் நான் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதேபோல் , பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.












Click it and Unblock the Notifications