ரூ.300 கோடியா? சாலையோர வியாபாரிக்கு "பறந்த" வரி ஏய்ப்பில் நோட்டீஸ்! அதிர்ந்த உ.பி ஜிஎஸ்டி அதிகாரிகள்
ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தினால் அது தொடர்பான கணக்கை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை ஓரத்தில் துணி விற்பனை செய்து வரும் நபர் சுமார் ரூ.366 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்து அதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் முசாபர் நகரில் 'எஜாஸ் அகமது' எனும் 40 வயது நபர் பழைய இரும்பு கடை ஒன்றை கடந்த ஓராண்டு முன்னர் நடத்தி வந்திருந்தார். இதில் நகரம் முழுக்க இருந்து சேகரிக்கப்படும் பயனற்ற இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் காப்பர் போன்றவற்றை தரம் பிரித்து உருக்கு ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.500 தொடங்கி ரூ.1,000 வரை வருமானம் பார்க்க முடிந்திருக்கிறது. எனவே தனது கடைக்கு அவர் ஜஎஸ்டி எண்ணை பெற்றிருக்கிறார்.
ஆனால் இந்த வருமானம் நிரந்தரமாக இருக்கவில்லை. சில நேரங்களில் ரூ.100 கூட கிடைக்காமல் ஒரு நாள் முழுக்க கடையிலேயே இருந்திருக்கிறார். இதனையடுத்து இந்த தொழிலை விட்டுவிட்டு தனியாக துணி வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார். துணி வியாபாரத்தில் ஓரளவு பணம் வந்திருக்கிறது. இந்த வியாபாரத்திற்கு தனியாக கடை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ரோட்டு ஓரம் வைத்து விற்பனை செய்திருக்கிறார்.
துணி கடை
இதனால் இவருக்கு ஜிஎஸ்டி எண் தேவைப்பட்டிருக்கவில்லை. பழைய ஜிஎஸ்டி எண்ணை முடக்கிவிடுமாறு இன்டர்நெட் கடை நடத்தி வரும் பட்டய கணக்காளரிடம் கூறியுள்ளார். பின்னர் எஜாஸ் அகமது வழக்கம்போல தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்திருக்கிறார். அப்போதுதான் இவரது வீட்டில் ஜஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் எதும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேபோல இந்த சோதனையின்போது வீட்டில் எஜாஸ் அகமது இருந்திருக்கவில்லை. எனவே இவரையும் ஒரு பக்கம் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.
புகார்
இந்த விஷயத்தை அறிந்துகொண்ட எஜாஸ் அகமது, தன்னுடைய வங்கி பண பரிவர்த்தனைகள், தான் செய்யும் தொழில், அதன் மூலப்பொருட்கள் எங்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்த விவரங்களோடு வருமான வரித்துறை அதிகாரிகளை அணுகியுள்ளார். இந்த சம்பவம் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் எஜாஸ் அகமது சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் சரியானதாக இருக்கின்றன. அப்படியெனில் யார் இவ்வளவு கோடிகளுக்கு வர்த்தகம் செய்தது என்கிற கேள்வியெழுந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
விளக்கம்
இது குறித்து மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஜிஎஸ்டி துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு இணை கமிஷனர் ஜே.எஸ்.சுக்லா கூறுகையில், "எஜாஸ் அகமதுவின் பழைய இரும்புக்கடையின் பேரில் ரூ.366 கோடிக்கு பில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எவற்றிற்கும் ஜி.எஸ்.டி செலுத்தப்படவில்லை. இது மிகப்பெரும் மோசடியாக தெரிகிறது. எனவே பரந்த அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை வளையத்திற்குள் தற்போது பல நிறுவனங்களை கொண்டுவந்துள்ளோம். ஒரு சிலர் தங்களது ஜிஎஸ்டி எண்ணை வேறு ஒருவர் பயன்படுத்த அனுமதிக்கின்றனர்.
விசாரணை
எனவே விசாரணைக்கு பின்னர்தான் முழு விவரமும் கூற முடியும். தற்போது தன்மீது குற்றம் இல்லையென்றும், உண்மையான குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஜாஸ் அகமது ஜிஎஸ்டி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்" என்று கூறியுள்ளார். சாலையோரத்தில் துணி விற்றுவரும் நபர் மீது சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது உத்தரப் பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.