பத்திரிகையாளரை ஓட, ஓட விரட்டி தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி.. உ.பி.யில் பரபரப்பு.. வைரல் வீடியோ!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது.
மண்டலப் பஞ்சாயத்து தேர்தலில் 825 இடங்களுக்கு 635 இடங்களை பாஜக மற்றும் அப்னா தளம் கட்சிகள் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பா.ஜ.க வெற்றி பெற முடியாது என்று பல்வேறு தரப்பினரும் ஆருடம் கணித்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பா.ஜ.க.வுக்கு தெம்பை கொடுத்துள்ளது.

கடும் மோதல்
ஆளும் பா.ஜ.க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில் வலுக்கட்டாயமாக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனால் பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே பல்வேறு இடங்களில் கடும் மோதல் மூண்டது. கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பத்திரிகையாளரை தாக்கினார்
17 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் உன்னாவ் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பொது இடத்தில் பத்திரிகையாளரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் என்ன?
உன்னாவ் மாவட்டத்தின் தலைமை மேம்பாட்டு அதிகாரிதான் தொலைக்காட்சி நிருபரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த தொலைக்காட்சி நிருபர் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் உள்ளூர் சபை உறுப்பினர்களைக் கடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து அந்த அதிகாரி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

உரிய விசாரணை
இந்த சம்பவம் குறித்து உன்னாவ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் கூறுகையில், தாக்கப்பட்ட பத்திரிகையாளரிடமிருந்து எங்களுக்கு எழுத்துப்பூர்வ புகார் வந்துள்ளது. இந்த வழக்கில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். உத்தர பிரதேசத்தில் தோடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications