உ.பி.யில் களைகட்டும் வெங்காய அரசியல்- அடமானமாக ஆதார் கார்டு- கடனாக வெங்காயத்தை கொடுத்த சமாஜ்வாடி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வெங்காய விலை உயர்வுக்கு எதிராக சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் நூதன போராட்டத்தை நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் வெங்காய விலை கடும் உச்சத்தை அடைந்துள்ளது. இதனை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 1 கிலோ வெங்காயம் ரூ100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக சட்டசபைக்கு வெளியே 1 கிலோ வெங்காயம் ரூ40க்கு என விற்பனை செய்தனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகளோ வேறொரு நூதன வடிவில் போராட்டத்தை நடத்தினர்.
ஆதார் கார்டு, வெள்ளி பொருட்களை அடமான பொருளாக பெற்றுக் கொண்டு வெங்காயத்தை கடனுக்கு விற்பனை செய்தனர். பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில்தான் சமாஜ்வாடி கட்சியினர் இப்போராட்டத்தை நடத்தினர்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநில கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ35க்கு விற்பனை செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருமணம் உள்ளிட்டவைகளுக்கு அழைப்பிதழைக் காட்டி 25 கிலோ வெங்காயத்தை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications