அகிலேஷ் யாதவ் திடீர் அதிரடி- சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு என அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைப்பதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் 2 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 2 தொகுதிகளில் ஒன்று அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்தது. மற்றொன்று கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான் ராஜினாமா செய்தது. இருவரும் சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏக்களானதால் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையுமே பாஜகவிடம் அகிலேஷ் யாதவ் கட்சி பறிகொடுத்தது. ராம்பூர் தொகுதியில் பாஜகவைன் கான்ஷ்யாம் சிங் லோதி, சமாஜ்வாதியின் ஆசிம் ராஜாவை வீழ்த்தினார். ஆசம்கார்க் தொகுதியி பாஜகவின் தினேஷ் லால் யாதவ் அமோக வெற்றியை அறுவடைசெய்தார்.
சமாஜ்வாதி கட்சியின் கோட்டையிலேயே பாஜக கொடி பறந்தது உ.பி. அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் இந்த விஸ்வரூபம் தொடர்பாக என்னதான் அகிலேஷ் யாதவ் தரப்பு விமர்சனங்களை முன்வைத்தாலும் சமாஜ்வாதி கட்சிக்குள் இந்த பிரச்சனை ஓய்ந்துவிடவில்லை.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் இன்று அகிலேஷ் யாதவ் அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார். அதாவது கட்சித் தலைவர் பதவி தவிர தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாக அமைப்புகள் என ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சி அமைப்புகளும் கலைக்கப்படுவதாக அகிலேஷ் யாதவ் தமது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்ததை அக்கட்சி தலைமையால் எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை. இதனால்தான் ஒட்டுமொத்த கட்சி கட்டமைப்பையே கலைத்துவிட்டார் அகிலேஷ் யாதவ் என்கின்றன.












Click it and Unblock the Notifications