சிஎம் யோகி வீட்டின் அடியில் சிவலிங்கம்.. அகழ்வாராய்ச்சி நடத்துங்க தெரியும்.. அகிலேஷ் யாதவ் பரபர
லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிகாரப்பூர்வ இல்லம் லக்னோவில் இருக்கும் நிலையில், அந்த வீட்டின் அடியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அந்த இடத்தை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், யோகி ஆட்சியில் புல்டோசர்கள் வளர்ச்சியைத் தரவில்லை.. மாறாக அழிவையே தந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அரசு கடந்த சில காலமாகவே பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. அவை பெரும்பாலும் கோவில்கள் அல்லது மசூதிகளுக்கு அருகிலேயே நடத்தப்படுகிறது.

கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தின் சம்பாலில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கூட 1857 கிளர்ச்சி காலகட்டத்தைச் சேர்ந்த படிக்கட்டுக் கிணறு 250 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள்:
இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகள் அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி இதை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. யோகி அரசு தனது தோல்விகளை மறைக்க இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகளைச் செய்வதாகவும் இதன் மூலம் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தவே இதுபோல செய்து வருவதாகவும் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். உபி அரசின் செயல்பாடுகளைச் சாடும் வகையிலேயே செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், சில பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
அகிலேஷ் யாதவ்:
அதாவது லக்னோவில் முதல்வர் இல்லத்தின் கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும் அதை அதைத் தோண்டி எடுத்து அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "உத்த பிரதேச அரசின் கருவூலம் காலியாகிவிட்டது. இங்குள்ள விவசாயிகளையும் யோகி அரசு வஞ்சித்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக எல்லாம் சொன்னார்.. இப்போது என்ன விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இங்கு புல்டோசர்கள் மூலம் அப்பாவி மக்களின் வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுகின்றன.. இதற்குப் பெயர் வளர்ச்சி இல்லை, அழிவு. முதல்வரின் நடவடிக்கைகளால் வளர்ச்சி எதுவும் இல்லை.. அழிவு மட்டுமே ஏற்படுகிறது. யோகி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை..
சிவலிங்கம்:
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழல் உச்சத்தில் உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் என யாருமே சந்தோஷமாக இல்லை. பாஜக அரசு தனது தோல்வியை மறைக்கவும், பொதுமக்களின் பிரச்சினைகளைத் திசை திருப்பவும் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் பட இடங்களைத் தோண்டி வருகிறது. இப்போது நான் சொல்கிறேன்.. முதலமைச்சரின் இல்லத்திற்கு அடியிலும் சிவலிங்கம் இருக்கிறது. அங்கும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
முதலீட்டாளர்களுக்காக 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதாக விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். ஏன் அரசிடம் இப்போது நிலம் இல்லையா.. இப்போது, விவசாயிகளின் நிலத்தை நாசம் செய்யவே இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளனர். முதலீடு என்ற பெயரில் பாஜக அரசு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது.
மாற்றத்தை விரும்பும் உத்தரப் பிரதேச மக்கள்:
நாம் மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது, நிறையக் கற்றுக்கொள்கிறோம். உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது.. ஆனால், இங்குள்ள மக்களை சில விஷயங்களைச் சொல்லிச் சிக்க வைத்து இருக்கிறார்கள்.. வரும் காலங்களில் உத்தரப்பிரதேச மக்கள் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மீண்டும் ஒருமுறை, உத்தரப் பிரதேசம் வளர்ச்சி மற்றும் செழிப்பு பாதைக்குச் சீக்கிரமே திரும்பும்" என்றார்.












Click it and Unblock the Notifications