ஏம்ப்பா.. அப்படி என்ன கேட்டுட்டாரு கார்த்தி சிதம்பரம்.. ஏன் இவ்வளவு கொந்தளிப்பு?
லக்னோ: இன்று 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், கார்த்தி சிதம்பரத்தின் ட்வீட்டை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இன்று காலை முதலே தேசிய அளவில் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளே தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கிறது.

5 மாநில தேர்தல்
தேர்தலுக்கு முன்பு, இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் நீங்கலாக மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் இருந்தது. இந்தத் தேர்தலில் 4 மாநிலங்களையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு 260க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவே முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பாஜக தொடர்ந்து 2ஆவது முறையாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

பாஜக வெற்றி
அதேபோல உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. அதில் 3 மாநிலங்களிலும் ஆட்சியை பாஜக தக்க வைத்துள்ளது. உத்தரகண்ட்டில் பாஜக 47 இடங்களில் முன்னிலை பெறும் நிலையில், காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களிலும் பாஜகவே தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் தோல்வி
இந்த 5 மாநில தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மேலும், பல்வேறு காரணங்களால் பஞ்சாபிலும் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. மொத்தம் 117 இடங்கள் உள்ள பஞ்சாபில் 90 இடங்களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 5 மாநிலங்களில் எங்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்
இதனிடையே சிதம்பரம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு இணையத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்காத நிலையில், கார்த்தி சிதம்பரம் தனது ட்வி்டரில், "நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் எதைப் பார்க்கலாம். எதாவது பரிந்துரைகள் உள்ளதா" என்று கேட்டுப் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்
5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த ட்வீட்டை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் மக்கள் அளித்த முடிவு இது தான் என்பதால் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதை நினைத்து ஃபீல் பண்ணுவதால் எந்த பலனும் இல்லை என்று கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாகவும் சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications